தற்போது நடப்பது கூட்டணிக் கட்சிகளின் சகாப்தம் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்: நிதிஷ்குமார்
பாட்னா: இந்தியா இப்போது கூட்டணிக் கட்சிகளின் சகாப்தமாக திகழ்வதை மத்திய அரசு உணர்ந்து கொண்டு கூட்டாட்சிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
பாட்னாவில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் நிதிஷ்குமார் கூறியதாவது:
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவானது மாநிலக் கட்சிகளுக்கு பொதுமக்களின் ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறது. இதற்குக் காரணம் இந்த கட்சிகளால்தான் மாநிலங்களின் தேவைகளை உணர்ந்து நிறைவேற்ற முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
பஞ்சாப் தேர்தலில் வென்றுள்ள பிரகாஷ்சிங் பாதல் மற்றும் கருணாநிதி ஆகியோர் அரசியலில் முக்கியமான இடத்தில் இருப்பதற்கும் இதுவே காரணம். 1967-ம் ஆண்டு முதல் தமது அரசியல் இருப்பை நிலையாக வைத்திருக்கக் கூடிய பாதலுக்கு எனது வாழ்த்துகள்.
இது கூட்டணிக் கட்சிகளின் சகாப்தம். மத்திய அரசு இதை உணர்ந்து கொள்ள வேண்டும். அரசியல் சாசனத்தின் அடிப்படையிலான கூட்டாட்சி முறைக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டியது அவசியமாகும்.
நான்காவது அணி அமைக்கப்படுமா என்று கேட்கப்படுகிறது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு அனைத்து அணிகளுக்கும் எனது வாழ்த்துகள்.
மக்களைப் பொருத்தவரை வளர்ச்சித் திட்டங்களை ஆதரிக்கிறார்கள். நல்ல நிர்வாகத்தை ஏற்றுக்கொள்கின்றனர். ஊழலை சகித்துக் கொள்ள மறுக்கின்றனர்.
உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரையில் புதிய அரசாங்கமானது நல்ல நிர்வாகத்தை நீதியுடனான வளர்ச்சித் திட்டங்களை கொடுக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் அந்த மாநிலம் முன்னேறும் என்றார் நிதிஷ்குமார்.












Click it and Unblock the Notifications