பிரசாரத்தில் தகராறு: தேமுதிக- அதிமுகவினர் இடையே தள்ளு முள்ளு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் பிரச்சாரம் செய்ததில் ஏற்பட்ட தகராறில் அதிமுக மற்றும் தேமுதிகவினர் மோதிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக வேட்பாளர் முத்துகுமாரை ஆதரித்து ராமநாதபுரம் மாவட்ட தேமுதிக செயலாளர் சி்ங்கை ஜின்னா, நெலலை கிழக்கு மாவட்ட செயலாளர் கணேஷ் குமார் ஆதித்தன், வார்டு செயலாளர் சங்கரநாராயணன், நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் சங்கரன்கோவில் 27வது வார்டு சங்குபுரம் பகுதியில் நேற்று மாலை பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சிங்கை ஜின்னா பேசுகையில், மின்வெட்டு பிரச்சனை அதிகமாக இருப்பதால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்புக்கு காரணமான அதிமுகவுக்கு இந்த தேர்தலில் யாரும் வாக்களிக்க கூடாது. குறிப்பாக பெண்கள் வாக்களிக்க வேண்டாம். அதற்கு மாறாக தேமுதிகவுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார்.
அப்போது அந்த வழியாக அமைச்சர் சம்பத் தலைமையிலான நிர்வாகிகள் சென்றனர். சிங்கை ஜின்னா பேசிக் கொண்டிருந்ததை கேட்ட அவர்கள் அங்கிருந்த தேமுதிகவினர் பிரச்சாரம் செய்யக் கூடாது, அதிலும் அதிமுகவுக்கு எதிராக பேசுவதை தவிர்க்க வேண்டும். அதிமுக ஓட்டுகளை கலைக்கிறீர்களா என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இருகட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தகவல் அறிந்து பறக்கும் படையினர் அங்கு வந்ததும் இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் இது குறிதது சிங்கை ஜின்னா சங்கரன்கோவில் டவுன் போலீசில் அதிமுகவினர் மீது புகார் செய்தார். இந்த திடீர் மோதலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications