ஈஞ்சம்பாக்கம் அருகே ரூ.300 கோடி அரசு நிலத்தை ஆக்கிரமித்து விற்க முயன்ற காங். நிர்வாகிகள் தலைமறைவு
திருவான்மியூர்: ஈஞ்சம்பாக்கம் அருகே ரூ.300 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈஞ்சம்பாக்கம் பெத்தல் நகர் பக்கிங்காம் கால்வாய் இடையே உள்ளது காரப்பாக்கம். அங்கு அரசுக்கு சொந்தமாக ரூ.300 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை ஆக்கிரமித்த சிலர் அதை ஏக்கர் ரூ.50 லட்சத்திற்கு விற்பனை செய்ய விளம்பரம் கொடுத்தனர்.
அதைப் பார்த்து சிலர் முன்பணமாக ரூ.30 லட்சம் வரை கொடுத்தனர். நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் அதில் ரியல் எஸ்டேட் அலுவலகம் கட்டினர். மேலும் முன்பணம் கொடுத்தவர்கள் தங்கள் பங்குக்கு அங்கு குடிசைகள் போட்டனர். இதைப் பார்த்த மக்கள் சோழிங்கநல்லூர் தாசில்தார் கோவிந்தராஜனிடம் இது குறித்து புகார் தெரிவித்தனர். உடனே அவர் இது குறித்து நீலாம்பூர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து இன்று தாசில்தார் கோவிந்தராஜன், ஆர்.டி.ஓ. எட்டியப்பன், வருவாய் அலுவலர் தனபால், கிராம நிர்வாக அதிகாரி குமரேசன் ஆகியோர் ஆக்கிரமித்த நிலத்தை பார்வையிட்டு அங்கிருந்த ரியல் எஸ்டேட் கட்டிடத்தை இடித்து தள்ளினர். மேலும் அங்கிருந்த குடிசைகளையும் அகற்றினர்.
அரசு நிலத்தை ஆக்கிரமித்து விற்க முயன்றது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் கபாலி, ஆறுமுகம், டேவிட் மற்றும் கார் டிரைவர் வெட்டுவாச்சேரியை சேர்ந்த முருகேசன் ஆகியோர் மீது நீலாம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முருகன் கைது செய்யப்பட்டார். ஆனால் மற்ற 3 பேர் தலைமறைவாகிவிட்டனர். போலீசார் அவர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications