வாக்குப்பதிவு நிலவரம் 2 மணி் நேரத்திற்கு ஒரு முறை எஸ்.எம்.எஸ்.: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு உத்தரவு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து 2 மணி நேரத்திற்கு ஒரு முறை எஸ்.எம்.எஸ். அனுப்ப வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள 242 வாக்குச்சாவடிகள் 24 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள 1,160 பணியாளர்களுக்கு நெல்லை வண்ணார்பேட்டை எப்எக்ஸ் பொறியியல் கல்லூரியில் நேற்று 2ம் கட்ட பயிற்சி நடந்தது.
அப்போது தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது,
வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் அனைவரும் 17ம் தேதி காலை 10 மணிக்கு அந்தந்த வாக்குச்சாவடியில் ஆஜராக வேண்டும். மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் சரி பார்த்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
வாக்குப்பதிவிற்கு முன்னதாக மாதிரி வாக்குப்பதிவு நடத்த வேண்டும். காலை 8 மணிக்கு வாக்குப்பதிவைத் துவங்கி சரியாக மாலை 5 மணிக்கு முடிக்க வேண்டும். வாக்குப்பதிவு தொடங்கிய விபரம் மற்றும் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை (காலை 9, 11 மணி, பிப்ற்பகல் 1,3,5) வாக்குப் பதிவு நிலவரம் குறித்து எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
5 மணிக்கு வாக்குச்சாவடிகளில் இருக்கும் அனைவருக்கும் டோக்கன் வழங்கி விட்டு வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். 5 மணிக்கு பிறகு யாரையும் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பதிவு இயந்திரத்தை சுவிட்ச் ஆப் செய்து சீல் வைக்க வேண்டும் என்றனர்.












Click it and Unblock the Notifications