ஆந்திராவில் தெலுங்கில் பேசிய மாணவியை தாக்கிய பள்ளி முதல்வர்
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் சக மாணவர்களுடன் தெலுங்கில் பேசிய 4ம் வகுப்பு மாணவியை தாக்கிய பள்ளி முதல்வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் என்.எஸ்.என். இங்கிலீஷ் மீடியம் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி வளாகத்திற்குள் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்று கடுமையான விதிமுறை பின்பற்றப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 6ம் தேதி 4ம் வகுப்பை சேர்ந்த மாணவி ஒருவர், சக மாணவர்களிடம் தெலுங்கில் பேசி உள்ளார். இது குறித்து அப்பள்ளியின் முதல்வர் என்எஸ்என் மூர்த்தி என்பவர் மாணவியை தனியே அழைத்து விசாரித்துள்ளார்.
அப்போது பள்ளியின் விதிமுறையை மீறி தெலுங்கில் பேசிய குற்றத்திற்காக மாணவியை முதல்வர் தாக்கி உள்ளார். இதில் மாணவியின் வலது கை மற்றும் முழங்கை பகுதிகளில் காயம் ஏற்பட்டது.
காயமடைந்த மாணவிக்கு அப்பகுதியில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து காயமடைந்த மாணவியின் பெற்றோர், போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து மாணவியை தாக்கிய பள்ளி முதல்வர் மீது வழக்கு (ஆபத்தான ஆயுதங்களை வைத்து தாக்குதல், காயப்படுத்துதல்) பதிவு செய்த போலீசார், இது குறித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications