கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் - ஜி.ராமகிருஷ்ணன்

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் நிலவும் வரலாறு காணாத மின்வெட்டால் தொழில், விவசாயம், கல்வி, குடிநீர் விநியோகம், வீட்டுப்பணிகள் என்று அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை தொடர்ந்து ஆண்டு வரும் திமுக, அதிமுக அரசுகள் கடந்த 10 ஆண்டுகளில் தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தியை திட்டமிடாததே இதற்கு காரணம்.
வெளிநாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சாரத்தை அளிக்க முயற்சி எடுத்து கொண்ட திமுக, அதிமுக அரசுகள் தமிழக தொழில்களுக்கான மின் தேவை குறித்து கவலைப்படவில்லை. இதனால் தமிழகத்தில் கடும் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கோடைக்காலம் துவங்கிவிட்ட நிலையில் மின் தேவை மேலும் அதிகரிக்கும். எனவே இப்பிரச்னைக்குத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் அமைத்த நிபுணர் குழுக்கள் அறிக்கை அளித்துவிட்ட நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை கொண்டு வர மத்திய அரசின் மின்தொடர் பாதைகளை பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
தனியார் நிறுவனங்கள் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய மானிய விலையில் டீசல் வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்," என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications