2ஜி உரிமம் ரத்து: பிரதீபா பாட்டீலின் கருத்தைக் கேட்கும் முடிவு தள்ளிவைப்பு
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் கருத்தைக் கேட்கும் முடிவை மத்திய அரசு தள்ளிவைத்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆ.ராசா மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்ட 122 உரிமங்களையும் ரத்து செய்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. மேலும் ஏலம் மூலம் புதிய உரிமங்களை வழங்கவும் உத்தரவிட்டு அதற்கான காலக்கெடுவையும் நீதிமன்றம் நிர்ணயித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பால் மத்திய அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 122 2ஜி உரிமங்களை ரத்து செய்தது குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு கடந்த 2ம் தேதி உச்சர நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதித்துறை தனது அதிகார எல்லையைத் தாண்டி அரசின் நிர்வாக முடிவில் தலையிடுவது போல் உள்ளது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு நிர்வாக ரீதியாக எடுக்கும் ஏதாவது முடிவை உச்சநீதிமன்றம் செல்லாது என்று கூறினால் பொது நலன் கருதி அரசியல் சாசனத்தின் 143வது பிரிவின்படி குடியரசுத் தலைவர் மூலம் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் கேட்க முடியும்.
அவ்வாறு விளக்கம் கேட்பது குறித்து குடியரசுத் தலைவர் கருத்தை கேட்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது.
அந்த கூட்டத்தில் 122 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் எழுந்துள்ள பிரச்சனைகள், இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் தலையீட்டைக் கோருவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் பிரதீபா பாட்டீலின் கருத்தைக் கேட்பது குறித்து எதுவும் முடிவு செய்யப்படவில்லை.
இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்கும் முன்பு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்தைக் கேட்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து அடுத்த வாரம் அமைச்சரவை கூட்டம் நடக்கும் என்றும் கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications