தேமுதிக-அதிமுக மோதல்: பிரச்சாரம் செய்யாமல் திரும்பிய நடிகர்!
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் தேமுதிக-அதிமுகவுக்கும் ஏற்பட்ட மோதலால் தேமுதிகவை சேர்ந்த நடிகர் ராஜேந்திரபிரசாத் பிரச்சாரம் செய்யாமல் திரும்பினார்.
தேமுதிக வேட்பாளர் முத்துகுமாருக்கு வாக்குகள் சேகரித்து மேலநீலிதநல்லூர் ஒன்றிய பகுதிகளில் திரைப்படை நடிகர் ராஜேந்திர பிரசாத் வன்னிகோனேந்தல், பனவடலிசத்திரம், ஆயாள்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று சுற்று பயணம் செய்து வாக்கு சேகரித்தார். திருமலாபுரத்தில் வாக்கு சேகரித்த பின்னர் ஆயாள்பட்டி கிராமத்திற்கு சென்றார். அப்போது அங்கு அதிமுகவினரும், தேமுதிகவினரும் அதிகளவில் திரண்டிருந்தனர். அப்போது அந்த கிராமத்திற்கு சென்ற நடிகர் ராஜேந்திரபிரசாத்தை பேச விடாமல் அதி்முகவினர் கூச்சல் எழுப்பினர்.
இதனால் அங்கு பதற்றமும், மோதல் ஏற்படக்கூடிய சூழ்நிலையும் உருவானது. தகவல் அறிந்ததும் பனவடலிசத்திரம் போலீசார் அங்கு விரைந்து வந்து இரு தரப்பினரையும் கலைத்தனர். இதனால் பெரும் மோதல் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து அந்த கிராமத்தில் நடிகர் ராஜேந்திர பிரசாத் பிரசாரம் செய்யாமலேயே புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications