தயா என்ஜீனியரிங் கல்லூரி... கலெக்டரிடம் அழகிரி வக்கீல் நேரில் விளக்கம்
மதுரை: தயா என்ஜினீயரிங் கல்லூரி விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வக்கீல் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டையில் மத்திய மந்திரி மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது.
இந்த கல்லூரி நீர்பாசன வாய்க்காலை அடைத்து கட்டப்பட்டுள்ளதாக அந்த பகுதி விவசாயிகள் சங்க தலைவர் ராமலிங்கம் புகார் அளித்தார்.
இந்த புகாரை தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த இடத்தை பார்வையிட்டு மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேலும், இது தொடர்பாக மத்திய மந்திரி மு.க.அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி, அவரது மகன் துரை தயாநிதி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் மு.க.அழகிரி நேரில் ஆஜராகாமல் இரண்டு முறை வக்கீல் மூலம் விளக்கம் அளித்தார்.
இதை தொடர்ந்து மூன்றாவது முறையாக வக்கீல் ஜானிகி ராமுலு நேற்று கலெக்டர் முன்னிலையில் மு.க.அழகிரி சார்பில் ஆஜாரானார்.
அப்போது, இந்த வழக்கு சென்னை உயர் நீதி மன்ற கிளையில் நிலுவையில் உள்ளதால், இது சம்பந்தமாக விளக்கம் அளிக்க மேலும் 20 நாட்கள் அவகாசம் கேட்டார். இதற்கு விவசாய சங்க தலைவர் ராமலிங்கம் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால், இது தொடர்பாக விளக்கம் அளிக்க காலஅவகாசம் வழங்கியும், அடுத்தக்கட்ட விசாரணை குறித்து நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் மாவட்ட கலெக்டர் சகாயம் தெரிவித்தார்.
இந்த விசாரணையின் போது கலெக்டருடன் கூடுதல் துணை கலெக்டர் பட்டாபிராமன், நில அளவை துறை இயக்குனர் மனோகரன், குண்டாறு என்ஜினீயர் முத்தையா, உசிலம்பட்டி ஆர்டிஓ புகழேந்தி ஆகியோரும் உடனிருந்தனர்.
மு.க. அழகிரியின் குடும்ப கல்லூரி விசாரணை என்பதால் கலெக்டர் அலுவலகத்தை சுற்றி திமுக முக்கிய பிரபலங்கள் குவிந்திருந்தனர். அதே போல பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications