சங்கரன்கோவில் வாக்காளர்களுக்கு ரூ. 5000 வரை அள்ளித் தர 'பலே' திட்டம்!
சங்கரன்கோவில்: ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்களின் விலை உயர்ந்து கொண்டே போக ஆரம்பித்துள்ளது. திருமங்கலம் தேர்தலில் ஆயிரம் என்ற அளவில் இருந்த ஒரு ஓட்டின் விலை இன்று ரூ. 5000 வரை உயர்ந்துள்ளதாம். சங்கரன்கோவில் வாக்காளர்களுக்கு தலைக்கு ரூ. 5000 வரை கொடுக்க பலே திட்டத்தை தீட்டியுள்ளனவாம் முக்கியக் கட்சிகள். குறிப்பாக அதிமுகவும், திமுகவும்தான் இதில் மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மின் தடை, பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றால் ஆளும்கட்சிக்கு எதிரான வாக்குகள் பல முனை போட்டியால் சிதறும் நிலையில் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள ஒவ்வொரு கட்சியும் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்நிலையில் ஒரு பிரதான கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நடத்திய ரகசிய கூட்டத்தில் முதற்கட்டமாக வாக்காளர்களுக்கு 1000 ரூபாய் வழங்கவும், தேர்தலுக்கு முந்தைய நாள் வரை படிப்படியாக 5 ஆயிரம் ரூபாய் வரை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ஆயிரம் ரூபாய் கட்டுகளை சுற்றுலா பஸ்கள், முக்கிய விஜபிக்கள் கார் மூலமும் கொண்டு வர திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பணப் பட்டுவாடாவை கச்சிதமாக முடிக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். மேலும் எந்தவிதமான பிரச்சினையும் வந்து விடாமல் இறுக்கமான முறையில் இதைச் செய்யுமாறும் எச்சரிக்கை கலந்து உத்தரவிட்டுள்ளார்களாம்.
வாழ்க சனநாயகம்...!












Click it and Unblock the Notifications