இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் திமுக முழக்கம்
டெல்லி: ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் முழக்கமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டமாக இன்று நடந்தது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அவரது உரை தொடங்குவதற்கு முன்பு திமுக உறுப்பினர்கள் எழுந்து இலங்கையின் போர்க்குற்றத்தைக் கண்டித்து கோஷமிட்டனர். மேலும், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில், இலங்கையின் போர்க்குற்றத்தைக் கண்டித்தும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதை இந்தியா ஆதரிக்க வேண்டும். இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் உரையில் இடம் பெற வேண்டும் என்று கோரி திமுக எம்.பிக்கள் கோஷமிட்டனர்.
திமுக உறுப்பினர்களின் திடீர் முழக்கத்தால் கூட்டுக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் திமுக உறுப்பினர்கள் தங்களது இருக்கையில் அமர்ந்தனர். அதைத் தொடர்ந்து பிரதீபா பாட்டீல் தனது உரையைத் தொடங்கினார்.
திமுக உறுப்பினர்கள் கோஷமிட்ட நிலையில் அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தைச் சேர்ந்த எந்த உறுப்பினரும் எழுந்து ஆதரவு தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications