'நிறைய ஓட்டு வாங்குங்க, அம்மா மோதிரம் தருவாங்க!'
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதியில் அதிக ஓட்டுக்களைப் பெறும் பகுதிகளைச் சேர்ந்த கிளைச் செயலாளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா படம் போட்ட தங்க மோதிரம் கிடைக்கும். அதை 'அம்மா' கையாலேயே வழங்க ஏற்பாடு செய்வேன் என்று மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் அன்பழகன் அதிமுக தொண்டர்களுக்கு ஆசை காட்டிப் பேசினார்.
சங்கரன்கோவில் தொகுதியில் வாக்குகளைத் திரட்ட பிரம்மப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளது அதிமுக. காரணம், மதிமுகவின் கடும் போட்டி என்கிறார்கள். போகிற திசையெல்லாம் மதிமுக குறித்துத்தான் மக்களிடையே அதிக பேச்சு நிலவுவதால் மதிமுகவை சமாளிப்பது எப்படி என்பதில் அதிமுக மட்டுமல்லாமல், திமுகவும் கூட கடும் கவலையுடன் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அழகுநாச்சியார்புரத்தில் நடந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில், தூத்துக்குடி முன்னாள் மாவட்ட செயலர் ஆறுமுகநாதன் பேசுகையில், கடந்த தேர்தலில், இப்பகுதியில் அ.தி.மு.க.,வுக்கு குறைவான ஓட்டுகளே கிடைத்துள்ளது. இம்முறை அதிக ஓட்டுகள் கிடைக்க, நிர்வாகிகள் பாடுபட வேண்டும்.அதிக ஓட்டுகள் வாங்கித் தரும் கிளைச் செயலர்களுக்கு, முதல் பரிசாக ஜெ., படம் போட்ட மூன்று சவரன் தங்க மோதிரம், இரண்டாவது பரிசாக இரண்டு சவரன் மோதிரம், மூன்றாவது பரிசாக ஒரு சவரன் மோதிரம்
வழங்கப்படும் என்றார்.
பின்னர் பேசிய மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் அன்பழகன் கூறுகையில், இந்தப் பரிசுகளை நமது அம்மா கையாலேயே உங்களுக்குக் கிடைக்க நான் ஏற்பாடு செய்கிறேன். அதற்கு நான் கியாரண்டி என்றார்.
இதைக் கேட்டதும் கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.












Click it and Unblock the Notifications