சங்கரன்கோவில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த கூட்டணிக் கட்சிகளுக்கு ஜெ. நன்றி
சென்னை: சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் வெற்றிக்குப் பின்னர், கிட்டத்தட்ட 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக தலைமை தொடர்பு கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக தமிழக ஜனநாயக காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஜவஹர் அலி ஆகியோருக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில்,
வரும் 13ம் தேதி அன்று நடைபெறவுள்ள சங்கரன்கோவில் சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க.,விற்கு தங்களுடைய கட்சியின் ஆதரவை வழங்கி உள்ளமைக்கு, எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.அ.தி.மு.க., வேட்பாளர் முத்துச்செல்வி, பெருவாரியமான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில், தங்களுடைய பிரசாரப் பணிகள் அமைய வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
கடந்த தேர்தலில் அதிமுகவுக்குத் துணை நின்ற தேமுதிக, சிபிஎம், சிபிஐ ஆகியவை தற்போது தூரப் போய் விட்டன. தேமுதிகவை ஜெயலலிதாவே விரட்டி விட்டார். சிபிஎம் தேமுதிகவுக்கு ஆதரவாகப் போய் விட்டது. சிபிஐ இரண்டும் கெட்டானாக இருக்கிறது, அதாவது யாரையும் ஆதரிக்கவில்லை, எதிர்க்கவும் இல்லையாம். சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசி வருகிறார். புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் திடீரென அதிமுகவுக்கு ஆதரவாக மாறியுள்ளார்.












Click it and Unblock the Notifications