திருச்சி கல்லூரியில் பேச வந்த சிங்களப் பேராசிரியை-கடும் எதிர்ப்பால் வெளியேற்றம்
திருச்சி: நெல்லைக்கு சிங்களப் பேராசிரியை ஒருவர் சமீபத்தில் வந்து கடும் எதிர்ப்பால் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் மேலும் ஒரு சிங்களப் பேராசிரியை தமிழகத்திற்கு வந்து தமிழ் அமைப்புகளின் போராட்டத்தால் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த ஒரு சிங்களப் பேராசிரியை சமீபத்தில் நெல்லையில் நடந்த மனோன்மணியம் பல்கலைக்கழக விழாவில் கலந்து கொண்டார். அப்போது தமிழ்ப் பெண்ளை இலங்கையில் யாரும் பலாத்காரம் செய்யவில்லை, சீரழிக்கவில்லை என்று அவர் பேசினார். இதற்கு நாம் தமிழர், மதிமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அவர் பல்கலைக்கழகத்திலிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் இன்னொரு சிங்களப் பேராசிரியையும் தமிழகத்திற்கு வந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறையின், நிர்வாகப் படிப்புப் பிரிவு தலைவராக உள்ளவர் பேராசிரியை ஹேமமாலி குணதிலகே. இவர் இன்று திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரிக்கு வந்தார்.
அங்கு நடந்த கருத்தரங்கில் அவர் பேசினார். இதை அறிந்த விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்தனர். ஹேமமாலிக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தில் ஹேமமாலியை பின்பக்கமாக வெளியேற்றி வைத்தனர்.
பின்னர் வந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்து அப்புறப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications