கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க மத்திய அரசுக்கு மாநில அரசு உதவ வேண்டும்: ஜி.கே. வாசன் கோரிக்கை
கடலூர்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் மறைந்த காங்கிரஸ் தலைவர் இளையபெருமாளின் சிலையை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
தலித் மக்களுக்காக போராடும் ஒரே இயக்கம் காங்கிரஸ் கட்சி தான். நாடு சுதந்திரம் அடைந்தபோது தமிழகத்தில் காங்கிரஸ் அமைச்சர்கள் 17 பேரில் இருவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதே போல காமராஜர் ஆட்சியில் கக்கன், பரமேஸ்வரன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர்.
இளையபெருமாள், மரகதம் சந்திரசேகரன் காங்கிரஸ் தலைவர்களாக இருந்தனர். தலித் சமூகத்தைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணன் குடியரசுத் தலைவராக இருந்தார். தற்போதுள்ள லோக்சபா சபாநாயகர் மீராகுமார் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரே. தலித் மக்களுக்காக வன்கொடுமை தடுப்பு சட்டம், வேலைவாய்ப்பு, மக்கள் பிரதிநிதிகளில் இட ஒதுக்கீடு, ஆதி திராவிடர் நலத்திற்காக தேசிய ஆணையத்தை அமைத்தது காங்கிரஸ் கட்சி தான்.
தமிழகத்தில் குறைந்தபட்சம் 24 மணி நேரத்தில் 14 மணி நேரம் மின்சாரம் இல்லாத சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க மத்திய அரசு எடுக்கும் முயற்சிக்கு தமிழக அரசு துணை நிற்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications