தூதரக கார் குண்டுவெடிப்பு: சிதம்பரம்-இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு
டெல்லி: டெல்லியில் இஸ்ரேல் தூதரக கார் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் குறித்து அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யாகோவ் அமித்ரார் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்து பேசினார்.
கடந்த மாதம் 13ம் தேதி டெல்லியில் பிரதமர் வீட்டுக்கு அருகே உள்ள பகுதியில் இஸ்ரேல் தூதரக அதிகாரியின் மனைவி சென்ற கார் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தூத்ரக அதிகாரியின் மனைவி உள்பட 4 பேர் காயமடைந்தனர். பைக்கில் வந்த நபர் காரில் ஸ்டிக்கர் குண்டு ஒட்டிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் இந்திய பத்திரிக்கையாளர் சையது முகமது காஸ்மி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யாகோவ் அமித்ரார் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்து வெடிகுண்டு தாக்குதல் குறித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 50 நிமிடம் நடந்தது. ஆனால் சந்திப்பின்போது பேசியதை தெரிவிக்க சிதம்பரமும், அமித்ராரும் மறுத்துவிட்டனர்.
இந்த வழ்ககு விசாரணை இன்னும் நடந்து கொண்டிருப்பதால் அமித்ராரிடம் சிதம்பரம் என்னென்ன தகவல்கள் தெரிவித்தார் என்று தெரியவில்லை. இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என்று இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications