உலகை உலுக்கப் போகும் பிரபாகரன் மகன் கொடூரக் கொலை வீடியோ இன்று வெளியீடு

பல நாட்டு ராணுவ உதவியுடனும், ஏராளமான சதி வேலைகளின் உதவியுடனும், விடுதலைப் புலிகளின் நிழலைக் கூட நெருங்க முடியாத இலங்கை ராணுவம், கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தில் ஈழப் போரை கொடூரமாக முடித்தது. லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து, தமிழ் இனத்தையே ஈழத்தில் சின்னாபின்னமாக்கி விட்டது.
ரத்த வெறி பிடித்த ஓநாய்களை விடவும் மோசமாக சிங்கள ராணுவத்தினர் நடந்து கொண்ட வெறிச்செயல், ஈனச் செயல், இனவெறி கொடூரம் குறித்த வீடியோ ஆதாரங்களை கடந்த ஆண்டு சேனல் 4 நிறுவனம் வெளியிட்டு உலகையே அதிர வைத்தது.
இந்த நிலையில் தற்போது இன்னொரு வீடியோ படத்தை அது உருவாக்கியுள்ளது. லண்டன் நேரப்படி இன்று இரவு 10.55 மணியளவில் ஒளிபரப்பவுள்ளது சேனல் 4 நிறுவனம்.
இந்த வீடியோ படத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்பட்ட கொடூரக் காட்சி அடங்கியுள்ளது. மேலும் பிரபாகரன் குறித்த பரபரப்புக் காட்சிகளும் இடம் பெற்றிருப்பதாகவும் இந்த ஆவணப்படத்தைத் தயாரித்த காலம் மெக்காரே தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணப் படத்தை இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை நாலரை மணியளவில் காணலாம்.
ஐ. நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா, பிரான்ஸ், நார்வே ஆகிய நாடுகள் கொண்டு வந்துள்ளன. இந்தப் பின்னணியில் நாளை வெளியாகவுள்ள வீடியோ காட்சிகள் உலக சமுதாயத்தை வெகுண்டெழச் செய்து, இலங்கையை வீழத்தும் என்ற பெரும் நம்பிக்கையுடன் ஈழப் போரில் நீதி கேட்டும் நிற்கும் ஈழத் தமிழர்களும், உலகின் பிற பகுதிகளில் வாழும் தமிழர்களும் பெரும் நம்பிக்கையுடன் உள்ளனர்.
குறிப்பாக இன்றைய வீடியோவில் தங்களது தலைவர் பிரபாகரன் குறித்த செய்தி இருக்குமோ என்ற பதைபதைப்பும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் மனதில் மேலோங்கி நிற்கிறது. அதேசமயம், பிரபாகரன் குறித்த தங்களது நிலைப்பாட்டில் அவர்கள் மிகவும் உறுதியுடன் இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications