பங்களாதேஷில் படகு கவிழ்ந்து 30 பேர் பலி, பலரைக் காணவில்லை
டாக்கா: பங்களாதேஷில் 200 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழந்ததில் 30 பேர் பலியாகினர். பலரைக் காணவில்லை. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பங்களாதேஷில் ஷரியத்பூர் மாவட்டத்தில் இருந்து தலைநகர் டாக்காவுக்கு 200 பயணிகளுடன் எம்வி ஷரியத்பூர்- 1 என்ற படகு புறப்பட்டது. இன்று காலை மேக்னா ஆற்றில் சென்ற அந்த படகு முன்ஷிகஞ்ச் மாவட்டத்தில் சென்று கொண்டிருக்கையில் சரக்கு படகுடன் மோதி கவிழந்தது. இதில் 30 பேர் பலியாகியுள்ளனர், பலரைக் காணவில்லை. இதுவரை 35 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
ஆற்றில் மூழ்கிய படகை வெளியே எடுத்தால் அதில் மேலும் பலர் இறந்துகிடக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவி்ததனர். மீட்பு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
உயிர் பிழைத்த துலால் தீவான் கூறுகையில், நான் தூங்கிக் கொண்டிருந்தேன். திடீர் என்று ஏதோ சத்தம் கேட்டு விழித்துப்பார்த்த போது எங்கள் படகு இன்னொரு படகுடன் மோதியிருந்தது. உடனே நான் ஆற்றில் குதித்துவிட்டேன். பின்னர் படகு கவிழ ஆரம்பித்தது. மக்கள் தங்களை காப்பாற்றுமாறு கத்தினார்கள் என்றார்.
அவரை அந்த வழியாக வந்த இன்னொரு படகில் இருந்தவர்கள் காப்பாற்றினர். ஆனால் படகில் இருந்த அவரது குடும்பத்தினர் 8 பேரைக் காணவில்லை.
பங்களாதேஷில் படகு விபத்துகள் சாதாரணமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications