ஊழியர்களிடம் பிடித்தம் செய்யும் வரிப் பணத்தை செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை!
சென்னை: ஊழியர்களின் சம்பளத்திலிருந்து வருமான வரி எனும் பெயரில் பிடித்தம் செய்யும் நிறுவனங்கள், அதை ஒழுங்காக அரசுக்கு செலுத்துவதில்லை என்றும், இத்தகைய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருமான வரித்துறை ஆணையர் கியான் சந்த் ஜெயின் கூறினார்.
மேலும் வருமான வரி சேவைகளை ஒரே இடத்தில் பெறும் வகையில் சென்னை, மதுரை, சேலம், திருச்சி ஆகிய 4 நகரங்களில் சிறப்பு சேவை மையங்கள் இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல தலைமை வருமான வரித்துறை ஆணையாளர் ஜி.சி.ஜெயின் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், "வருமான வரித்துறை தமிழ்நாடு மண்டலத்தில் 13.3.2012 நிலவரப்படி, நிறுவன வரியாக ரூ.20,407 கோடியும், வருமான வரியாக ரூ.11,782 கோடியும் வசூலாகி உள்ளது. ரீஃபண்டு நீங்கலாக இரண்டு வரிகளிலும் சேர்த்து நிகர வரியாக ரூ.27,657 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த தொகை 15 சதவீதம் அதிகம்.
நடப்பு நிதி ஆண்டில் ரூ.14,808 கோடி வருமான வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதில் இதுவரை ரூ.13,650 கோடி அதாவது 92 சதவீதம் வசூலாகிவிட்டது. எஞ்சிய தொகையும் வசூலாகிவிடும் என்று நம்புகிறோம்.
மெட்ரோ ரெயில் நிறுவனம் மீது புகார்
வரி பிடித்தம் செய்யப்படும் தொகை வருமான வரித்துறைக்கு ஒழுங்காக கட்டப்படுகிறதா என்பதை கண்டறிய திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அரசுத் துறை நிறுவனம் உள்பட பல தனியார் நிறுவனங்கள் வரிபிடித்தம் செய்துவிட்டு அந்த தொகையை வருமான வரித்துறைக்கு செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு பிடித்தம் செய்து கட்டப்படாத தொகை ரூ.100 கோடியில் ரூ.22 கோடி அளவுக்கு வசூலிக்கப்பட்டுவிட்டது.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்துவதற்காக நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.360 கோடி இழப்பீட்டு தொகையில் வரி பிடித்தம் ரூ.36 (10 சதவீதம் வரி) கோடி செய்துவிட்டு சிறப்பு தாசில்தார் (நில ஆர்ஜிதம்) பணத்தை வருமான வரித்துறைக்கு இன்னும் கட்டவில்லை. அந்த வரியை வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இந்த நிறுவனங்கள் தாங்கள் பிடித்தம் செய்து வைத்துள்ள பணத்தை அரசுக்கு செலுத்த இன்றே கடைசி நாள். தவறினால் 1.5 சதவீத வட்டியுடன் வசூலிக்க வேண்டி வரும்.
வருமான வரி சேவை மையங்கள்
வருமான வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு உதவும் வகையில் வகையில் ஆயகார் சேவா கேந்திரா என்று அழைக்கப்படும் வருமான வரி சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் முக்கிய வருமான வரி அலுவலகங்களில் ஏற்படுத்தப்படும். வருமான வரி தொடர்பான அனைத்து சேவைகளையும் இங்கு ஒரே இடத்தில் பெறலாம்.
சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு விசேஷ எண் கொடுக்கப்படும். அதை பயன்படுத்தி தங்கள் விண்ணப்பங்கள் எந்த நிலையில் உள்ளது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த சேவை மையங்கள் முதல்கட்டமாக சென்னை, மதுரை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் இந்த மாத இறுதிக்குள் அமைக்கப்படும்," என்றார்.
வருமான வரி தலைமை ஆணையாளர் (வரி பிடித்தம்) இ.சங்கரன் கூறுகையில், "நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடம் வரி பிடித்தம் செய்துவிட்டு அந்த தொகையை வருமான வரித்துறைக்கு கட்டாமல் இருந்து வருவதும், காலம்தாழ்த்தி கட்டுவதும் ஒரு வழக்கமாகவே இருந்து வருகிறது. இந்த விஷயத்தில் தனியார் நிறுவனங்கள்தான் என்றில்லை. ஒருசில அரசுத்துறை நிறுவனங்களும் இவ்வாறு தான் இருக்கின்றன'' என்றார்.












Click it and Unblock the Notifications