'கோக்'கும் வேண்டாம், 'ஜிமெயிலும்' வேண்டாம்- சிங்கள அமைச்சர் 'கத்தல்'!

கொழும்பில் அமெரிக்காவுக்கு எதிராக நடந்த பேரணியின்போதுதான் இப்படிக் கூறியுள்ளார் வீரவன்ச. இவர் ராஜபக்சே அமைச்சரவையில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருக்கிறார்.
பேரணியின்போது பேசிய அவர், அமெரிக்காவின் பொருட்களை இலங்கையில் தடைசெய்ய வேண்டும். கூகுல் மற்றும் ஜிமெயில் போன்ற இணைய தளங்களையும், கோகோ கோலா குளிர்பானம், கே.எப்.சி. உணவு வகைகளையும் இளைய சமூகத்தினர் புறக்கணிக்க வேண்டும்.
ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஐந்து நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்குள் வந்து ராணுவத்தினரை சுதந்திரமாக விசாரணை செய்வார்கள். எனவே, அரசு அடிபணிந்து விடக் கூடாது. மீறி அடிபணிந்தால் அடுத்த நிமிடம் அரசாங்கத்தைவிட்டு வெளியேறி விடுவேன்.
ஜெனீவாவில் ருத்திரகுமாரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் கூடாரமிட்டு இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்துகின்றனர்.
எதிர்வரும் 22 ம் அல்லது 23 ம் தேதிகளில் தீர்மானம் மீது உறுப்பு நாடுகளிடையே வாக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது நாட்டிற்கு பெரும் ஆபத்தாகவே அமையும்.
விடுதலைப் புலிகளை தோற்கடித்தமைக்காகவே அமெரிக்கா இலங்கையை பழிவாங்குகிறது.
யுத்தத்தை காரணம் காட்டி நன்மைகளை பெற்றுக்கொள்ளவோ பிரச்சினைகளை மூடி மறைக்கவோ அரசிற்கு தேவையில்லை. இலங்கைக்கு எதிராக செயற்படும் அமெரிக்காவின் பொருட்கள் உள்நாட்டில் தடை செய்யப்பட வேண்டும்.
இளைய சமூகத்தினர் அமெரிக்காவின் உற்பத்திப் பொருட்களை புறக்கணித்து விட்டு நாட்டை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் இணைந்துகொள்ள வேண்டும். நமக்கு அமெரிக்கா வேண்டாம், அமெரிக்கப் பொருட்கள் வேண்டாம். நம்முடன் அமெரிக்கா சண்டையிட விரும்பினால் நாமும் அதற்குத் தயாராக இருப்போம் என்று ஆவேசமாகப் பேசினார் வீரவன்ச.












Click it and Unblock the Notifications