மமதாவும், திமுகவும் (நிஜமாகவே) ஆதரவை வாபஸ் பெற்றால் மத்திய அரசு கவிழும்!

ரயில்வே பட்ஜெட் தொடர்பாக மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸும், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மான விவகாரம் தொடர்பாக திமுகவும், 'சீரியஸாக' செயல்பட்டு, 'நிஜமாகவே' ஆட்சிக்கு தந்து வரும் ஆதரவைத் திரும்பப் பெற்றால், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு அடுத்த விநாடியே கவிழும் அபாயம் உள்ளது. ஆனால் வழக்கம் போல இந்த இரு கட்சிகளும் மற்றும் ஒரு 'மகா நாடகத்தை' அரங்கேற்றுவதாக கருத்து நிலவுவதால் அந்த அளவுக்கு அபாயத்தை காங்கிரஸ் சந்திக்காது என்று நம்பப்படுகிறது.
ரயில்வே பட்ஜெட்டை நேற்றுதான் தினேஷ் திரிவேதி தாக்கல் செய்தார். இவர் மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸைச் சேர்ந்தவர். பட்ஜெட் தொடர்பாக தனது தலைவி மமதா பானர்ஜியின் யோசனைகளைக் கேட்டுக் கொண்டதாகவும், லாலு பிரசாத் யாதவின் ஆசி தனக்கு உள்ளதாகவும் கூறி விட்டுத்தான் பட்ஜெட்டைப் படிக்க ஆரம்பித்தார். ஆனால் திரிவேதி தாக்கல் செய்த பட்ஜெட்டை குறை கூறியும், டிக்கெட் கட்டணத்தை ஏற்றி விட்டார் என்று கூறியும் மமதா போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
திரிவேதியை தூக்குங்கள், கட்டண உயர்வை வாபஸ் பெறுங்கள் என்று கூறி கொல்கத்தாவிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இந்த விவகாரத்தில் திரிவேதி பதவி விலக மறுத்தாலோ அல்லது அவரை தூக்க காங்கிரஸ் மறுத்தாலோ, மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குக் கொடுத்து வரும் ஆதரவை மமதா பானர்ஜி வாபஸ் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நிஜமாகவே இந்தப் பிரச்சினையில் அவர் சீரியஸாக இருந்தால் அப்படிச் செய்யலாம்.
ஒரு வேளை அப்படிச் செய்தால், மத்திய அரசின் ஆதரவு 255 ஆக சுருங்கி விடும். ஆட்சி நீடிக்க குறைந்தது 272 பேராவது வேண்டும். இந்த இடத்தில் சுய நலனையே முதன்மையாக கொண்டு செயல்படும் இரு பெரும் கட்சிகளான சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜும் காங்கிரஸுக்குத் தேவைப்படும்.
இதில் சமாஜ்வாடி ஆதரவு கிடைத்தால் 21 எம்.பிக்கள் ஆதரவு கிடைக்கும். அப்படி கிடைத்தால், ஆட்சிக்கான ஆதரவு 276 ஆக உயரும்.
மறுபக்கம் இன்னொரு மிரட்டல் இருக்கிறது. அதாவது ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்காவிட்டால் அரசுக்கு வாபஸ் பெற திமுக முடிவு செய்யலாம். இப்படி ஒரு கற்பனை செய்து கொள்வோம். அப்படி நேர்ந்தால், மத்திய அரசுக்கு மகா சிக்கலாகி விடும்.
ஒருவேளை மமதாவும், திமுகவும் ஆதரவைத் திரும்பப் பெற்றால், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய இரண்டுமே இணைந்து ஆதரவு கொடுத்தாக வேண்டும். ஆனால் அப்படி கொடுக்கும் ஆதரவை இந்த இரு கட்சிகளும் எப்போது வேண்டுமானாலும் வாபஸ் பெறலாம். குறிப்பாக மாயாவதி எப்போது என்ன செய்வார் என்பது யாருக்கும் தெரியாது.
இதனால் அரசு ஸ்திரத்தன்மையோடு இருக்காது. எனவே திமுகவும், மமதா கட்சியும் இணைந்து வெளியேறினால் விரைவிலேயே இடைத் தேர்தல் வரலாம்.
மொத்தத்தில் திமுகவும் சரி, மமதா கட்சியும் சரி தங்களது நோக்கில் உண்மையாகவே உறுதியாக இருந்தால், அது காங்கிரஸுக்கு நிச்சயம் பேராபத்துதான். இருவரும் சேர்ந்து ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற்றால் ஆட்சி கவிழும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் இது நடக்குமா என்பதுதான் கேள்வி. இப்போது மமதா நடத்தி வருவது இன்னொரு பெரிய டிராமா என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை என்கிறார்கள். மத்திய அரசிடம் மேற்கு வங்கத்துக்கு பல்லாயிரம் கோடியை சிறப்பு நிதியாக அவர் கோருகிறார். இதை மத்திய அரசு தரும் வரை தினந்தோறும் ஏதாவது பிரச்சனையைக் கிளப்பி சும்மா பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு அதில் குளிர் காய்ந்து கொண்டிருப்பார்.
இப்போது ரயில் கட்டண உயர்வை எதிர்ப்பதால் அவருக்கு நல்ல பெயரும் கிடைத்துள்ளது.
இவர் இதுபோல ஏற்கனவே பலமுறை நாடகம் போட்டவர்தான் என்பதும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டியதாகவுள்ளது.
அதேபோலத்தான் திமுகவும். அதுவும் பலமுறை பல விஷயங்களில் 'டிராமா' போட்டுள்ளது. வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம், அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் என்று பலமுறை அது கூறியுள்ளது. இதில் பெரும்பாலான முறை இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்துத்தான் அது நாடகம் போட்டுள்ளது. எப்போதுமே சொன்னதை செய்ததில்லை திமுக. எனவே இந்த முறையும் ஆட்சியிலிருந்து விலகலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி சூசகமாக கூறியிருப்பதை யாரும் 'சீரியஸாக' எடுத்துக் கொள்ளளப் போவதில்லை.












Click it and Unblock the Notifications