சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கையில் வேட்டி, சேலை எதற்காக கொடுக்கணும்? வைகோ

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பெருங்கோட்டூர், சத்திரம் கொண்டான், அழகாபுரி ஆகிய கிராமங்களில் நேற்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
சிலர் தாங்கள் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்பதகாக் கூறி வருகின்றனர். அவ்வாறு சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கையில் ஏன் ரகசியமாக வீடு, வீடாக வேட்டி-சேலை கொடுக்க வேண்டும்.
4 நாட்களாக சங்கரன்கோவிலில் மின்தடையே ஏற்படவில்லை. இதை பொதுமக்கள் யாரும் நம்பிவிடக் கூடாது. தேர்தல் முடிந்த பிறகு மின்வெட்டு ஏற்படும். முல்லைப் பெரியாறு பிரச்சனையில் விவசாயிகளுக்காக நான் போராடினேன். விவசாயிகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் மதிமுக தான் முதலில் குரல் கொடுக்கும். இதேபோன்று இலங்கை தமிழர்களுக்காகவும் மதிமுக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. மதிமுக சாதி, சமயத்திற்கு அப்பாற்பட்டது என்பது உங்களுக்கே தெரியும்.
தமிழக அரசு பஸ் கட்டணம் மற்றும் பால் விலையை கடுமையாக உயர்த்தி மக்களை அல்லாட வைத்துள்ளது. பணம் கொடுத்து வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி நடக்கிறது. இந்நிலையில் மதிமுகவுக்கு வாக்களித்தால் அது அதிமுக அரசின் மக்கள் விரோதப் போக்கை எச்சரிப்பதாக இருக்கும்.
எங்கள் வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமார் வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ.வாக இருந்து பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அதே போன்று சங்கரன்கோவிலிலும் பல நல்ல திட்டங்களை நிறைவேற்ற மதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications