திராணியை நிரூபிக்க பணம் கொடுக்கும் அதிமுக: தேர்தல் ஆணையருக்கு திமுக தந்தி
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் கொடுப்பதைத் தடுக்கக்கோரி திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு தந்தி அனுப்பப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடக்கிறது. இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்வதால் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரி்ப்பில் ஈடுபட்டுள்ளன. அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம், இலவசங்கள் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பறக்கும் படைகளை அமைத்துள்ளது. அதையும் மீறி அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. அவ்வாறு அவர்கள் பணம் கொடுப்பதை தடுக்ககக் கோரி திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு நேற்று தந்தி அனுப்பப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கே.பி. ராமலிங்கம் எம்.பி., எஸ். தங்கவேல் எம்.பி., வழக்குரைஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோர் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி மற்றும் தமிழக தலைமை தேர்தல் அலுவலர் பிரவீண் குமார் ஆகியோருக்கு அனுப்பியுள்ள தந்தியில் கூறியிருப்பதாவது,
சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை மாலையில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் விநியோகித்து வருகின்றனர். எனவே, உடனடி நடவடிக்கை எடுத்து பண விநியோகத்தை தடுக்க வேண்டும். தேர்தல் நியாயமாக நடக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications