ஸ்ப்கெட்ரம் அலைவரிசை ஊழல்: விசாரணைக்கு சிறப்பு பெஞ்ச் அமைத்தது சுப்ரீம் கோர்ட்

உலுக்கிய ஊழல்
நாட்டை உலுக்கிய ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து உச்சநீதிமன்றத்திலும் சி.பி.ஐ. தனிநீதிமன்றத்திலும் பலவேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. அதில் ஒரு வழக்கில், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்த காலத்தில் வழங்கப்பட்ட 122 ஸ்பெக்ட்ரம் லைசென்சுகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.
நீதிபதிகள் ஏ.கே.கங்குலி, ஜி.எஸ்.சிங்வி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இந்த பரபரப்பான தீர்ப்பை கூறி இருந்தது. இந்த தீர்ப்புக்குப்பின், நீதிபதி கங்குலி பதவி ஓய்வு பெற்று விட்டார். இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த வழக்கை டெல்லி சி.பி.ஐ. தனி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சு.சாமி மனுமீது விசாரணை
சி.பி.ஐ தனிநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சுப்பிரமணியசாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு, நீதிபதி சிங்வி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஸ்பெக்ட்ரம் அலைவரிசை தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிப்பதற்காக, உச்சநீடிமன்ற தலைமை நீதிபதி கபாடியா சிறப்பு பெஞ்ச் ஒன்றை அமைத்து இருக்கும் தகவலை நீதிபதி சிங்வி வெளியிட்டார்.
இந்த பெஞ்சில், சிங்வியுடன் நீதிபதி ஏ.கே.பட்நாயக்கும் இடம்பெற்று இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ப.சிதம்பரத்துக்கு எதிரான சுப்பிரமணியசாமியின் மேல்முறையீட்டு வழக்கை இந்த தனி பெஞ்ச் விசாரிப்பதற்கான தகுந்த உத்தரவுகளை தலைமை நீதிபதியிடம் இருந்து பெற்றுக்கொள்ளும்படி, உச்சநீதிமன்ற பதிவாளருக்கும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.
122 லைசென்சுகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த தீர்ப்பு தொடர்பாக விளக்கம் கேட்டு, மத்திய அரசு, பொது நல வழக்கு மையங்கள் மற்றும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சார்பில் பல்வேறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால், அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் விசாரிப்பதற்காக இந்த சிறப்பு அமர்வை உச்சநீதிமன்றம் அமைத்து உள்ளது.












Click it and Unblock the Notifications