கூட்டணியில் இருந்து வெளியேறும் நிலைக்கு திமுகவை மத்திய அரசு தள்ளிவிடாது: கனிமொழி

இலங்கைக்கு எதிராக ஐ. நா. சபை கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது குறித்து ஆலோசனை நடத்த திமுக உயர் நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் நாளை நடக்கிறது. இந்நிலையில் இந்த தீர்மானம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
ஐ. நா. சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீ்ர்மானத்தை இந்தியா ஆதரிக்காவிட்டால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து திமுக தலைவர்கள் கூடி முடிவு செய்ய வேண்டும். இந்த விவாகரம் தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறும் நிலைக்கு திமுகவை மத்திய அரசு தள்ளிவிடாது என்று நம்புகிறேன்.
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து நாங்கள் கூறுவதை புரிந்துகொண்டு இந்த தீர்மானத்திற்கு மத்திய அரசு ஆதரவளிக்கும் என்று நம்புகிறேன். 2ஜி ஊழல் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்பதற்காகவெல்லாம் இலங்கை பிரச்சனையில் திமுக மென்மையான போக்கை கடைபிடிக்காது. இலங்கையின் உள்விவகாரத்தில் இந்தியா தலையிடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications