ராஜபக்சேவை தூக்கிடக்கோரி கோயம்பேடு வியாபாரிகள் ஸ்ட்ரைக் - மொட்டையடித்து ஆர்ப்பாட்டம்!
சென்னை: இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா முழுமையாக ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், சர்வதேச குற்றவாளி கூண்டில் ராஜபக்சேவை நிறுத்தி தூக்கிலிட கோரியும் கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.
கோயம்பேடு மார்க்கெட்டின் முதலாம் நுழைவாயிலில் பிரமாண்ட பந்தல் அமைத்து காலை 9.45 மணிக்கு அவர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கினார்கள். உண்ணாவிரதத்துக்கு பழ வியாபாரிகள் சங்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
காய்கறி அங்காடி சங்க தலைவர் ஜி.வி.ராஜசேகரன் முன்னிலை வகித்தார். மலர் அங்காடி சங்க தலைவர் அருள் விசுவாசம் போராட்டத்தை விளக்கிப் பேசினார்.
உண்ணாவிரதத்தை திரைப்பட இயக்குனர் கவுதம் தொடங்கி வைத்தார். நாம் தமிழர் கட்சி தலைவர் இயக்குனர் சீமான், தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் உள்பட பலர் சிறப்புரையாற்றினார்கள்.
உண்ணாவிரதத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் எல்.பி.ராஜேந்திரன், வைகுண்டம், முத்துராமன் உள்பட 700-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
இலங்கைக்கு பொருளாதார தடைவிதிக்க வேண்டும், ராஜபக்சேவை தூக்கிலிட வேண்டும், இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தின்மீது இந்திய நிபந்தனையின்றி வாக்களிக்க வேண்டும் போன்ற கோஷங்களை அவர்கள் முழங்கினார்கள்.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பழம், மலர் என 4 ஆயிரம் கடைகள் உள்ளது. அனைத்து கடைகளும் இன்று மூடப்பட்டு இருந்தது. வியாபாரிகள் போராட்டம் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று வெளி மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் வரவில்லை.
மொட்டை
உண்ணாவிரதத்தில் பங்கேற்ற பலரும் தங்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டனர். ஈழ சகோதரர்களின் துன்பத்தில் பங்கேற்கும் வகையில் தாங்கள் மொட்டையடித்துக் கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications