அணுமின் நிலையத்தை மூடக்கோரி நெல்லை, தூத்துக்குடி மீனவர்கள் ஸ்டிரைக்
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரியும், போராட்டக் குழுவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து அங்கு 10,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்றே 300 ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். அங்கு முன்னேற்பாடாக 49 பெண்கள் உள்பட 186 போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். இன்று ரஷ்ய விஞ்ஞானிகள் 96 பேர் உள்பட 950 ஊழியர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அணுமின் நிலையத்திற்கு பணிக்கு சென்றனர்.
இந்நிலையில் அணுமின் நிலையத்தை மூடக் கோரியும், போராட்டக் குழுவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நெல்லை மாவட்டத்தில் பெருமணல், கூட்டப்புளி, இடிந்தகரை, தொம்மையர்புரம், உவரி, கூடுதழை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், அமலிநகர், புன்னைகாயல், கொம்புதுறை, சிங்கித்துறை, வீரபாண்டியன்பட்டினம், ஆலந்தலை, மணப்பாடு, பெரியதாழை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் இன்று கடலு்ககு மீன்பிடிக்கச் செல்லவில்லை. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் அனைவரும் இடிந்தகரை போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மீனவர்கள் போராட்டம் காரணமாக கடற்கரை கிராமங்கள் அனைத்திலும் பதட்டம் நிலவுகிறது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications