கர்நாடக நாடாளுமன்ற இடைத் தேர்தலில் காங். மாபெரும் வெற்றி- 'கோட்டையை' இழந்தது பாஜக!

கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அந்தக் கட்சிக்கு பெரும் ஆதரவு வழங்கிய பகுதி உடுப்பி-சிக்மகளூர் தொகுதியாகும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்தப் பகுதியில் உள்ள 8 தொகுதிகளில் 7 தொகுதிகளில் பாஜக தான் வென்றது.
உடுப்பி-சிக்மகளூர் நாடாளுமன்றத் தொகுதியில் வென்று எம்பியான சதானந்த கெளடாவை பாஜக தலைமை சில மாதங்களுக்கு முன் முதல்வராக்கியது. இதையடுத்து அவர் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இங்கு இப்போது இடைத் தேர்தல் நடந்தது.
முதல்வர் பதவியை இழந்த எதியூரப்பா இந்தத் தொகுதியில் பிரச்சாரத்துக்கு வரவில்லை. மேலும் தனக்கு மீண்டும் முதல்வர் பதவி கோரி சதானந்த கெளடாவுக்கு எதிரான உள்குத்து வேலைகளையும் செய்தார்.
மேலும் பாஜக ஆட்சிக்கு வந்த பின் கர்நாடகத்தில் சுரங்க ஊழல், நில மோசடி உள்பட பல ஊழல்கள் நடந்துவிட்டன. சமீபத்தில் சட்டசபையில் அமைச்சர்களே (அமைச்சர்கள் சாவடி, பி.சி.பாட்டீல்) ஆபாச வீடியோ பார்த்ததும் மக்களை கடும் எரிச்சலாக்கியது.
இந் நிலையில் தான் இந்த இடைத் தேர்தலில் தனது கோட்டையிலேயே பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.
இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜெயப்பிரகாஷ் ஹெக்டே சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சுனில் குமாரை தோற்கடித்துள்ளார்.
தங்களது எம்பியாக இருந்த சதானந்த கெளடா முதல்வராகிவிட்டதால், இந்தத் தொகுதி மக்கள் பாஜகவுக்கே வாக்களிப்பார்கள் என்ற பெரும் நம்பிக்கையில் அந்தக் கட்சி இருந்தது.
ஆனால், பாஜக அரசு மீதான ஏராளமான ஊழல் புகார்கள் (இதில் முதல்வராக இருந்த எதியூரப்பா, அமைச்சர்களான ரெட்டி, கட்டா சுப்பிரமணிய நாயுடு, கிருஷ்ணா ஷெட்டி உள்ளிட்டோர் சிறைக்கும் சென்றனர்), ஆபாச விவகாரங்கள் (அமைச்சர் ஹாலப்பா நண்பரின் மனைவியை கற்பழிக்க முயன்றது, அமைச்சர் ரேணுகாச்சாரியா நர்ஸ் ஒருவருடன் நெருக்கமாக இருந்தது ஆகிய வீடியோக்கள், படங்கள் வெளியாகி பரபரப்பானது நினைவுகூறத்தக்கது), கடைசியாக சட்டசபையிலேயே அமைச்சர்கள் ஆபாச வீடியோ பார்த்ததும், எதியூரப்பா-பாஜக தலைமை மோதலும் சேர்ந்து கொள்ள அந்தக் கட்சிக்கு படுதோல்வி கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications