திமுக மோசமான தோல்வி- கடந்த தேர்தலை விட 40,000 ஓட்டுக்கள் குறைந்தது!
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தனித் தொகுதி இடைத் தேர்தலில் திமுக மிகவும் மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது.
கடந்த முறையைப் போலவே 2வது இடத்தை அக்கட்சி பெற்றுள்ள போதிலும், கடந்த முறையை விட இந்த முறை கிட்டத்தட்ட 40,000 ஓட்டுக்கள் அக்கட்சிக்குக் குறைந்து போயுள்ளது.
கடந்த 2011 சட்டசபை பொதுத் தேர்தலின்போது இத்தொகுதியில் அதிமுக சார்பி்ல கருப்பசாமியும், திமுக சார்பில் உமா மகேஸ்வரியும் போட்டியிட்டனர்.
இவர்களில் கருப்பசாமி 72,297 ஓட்டுக்களைப் பெற்று வெற்றி பெற்றார். 2வது இடத்தைப் பிடித்த உமா மகேஸ்வரி 61,902 ஓட்டுக்களைப் பெற்று தோல்வி அடைந்தார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம், 10,395 மட்டுமே.
ஆனால் இந்த முறை நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இந்த முறை அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியக்குமாரை விட 60,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெல்கிறார்.
கடந்த முறை திமுக வாங்கிய ஓட்டுக்களை விட இந்த முறை 40,000 வாக்குகளுக்கு மேல் குறைத்து வாங்கியுள்ளது. இது மிகவும் மோசமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இத்தனைக்கும் கடந்த முறை இத்தொகுதியில் திமுக, அதிமுகவைத் தவிர வேறு முக்கியக் கட்சிகள் எதுவும் போட்டியிடவில்லை. மதிமுக தேர்தலில் பங்கேற்கவில்லை. தேமுதிக, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. அப்படி இருந்தும் கூட அதிமுக வேட்பாளர் கருப்பசாமி வெறும் பத்தாயிரத்து சொச்சம் ஓட்டு வித்தியாசத்தில்தான் வென்றார்.
ஆனால் இந்த முறை தேமுதிக தனியாகப் பிரிந்து போட்டியிட்டது, மதிமுகவும் களத்தில் குதித்தது. திமுகவும் போட்டியிட்டது. அதிமுக தனித்துப் போட்டியிட்டது. அப்படி இருந்தும் அதிமுக மிகப் பெரிய அளவில் வாக்குகளை அள்ளியிருக்கிறது. மேலும், அதிமுகவின் வெற்றியைத் தடுக்கக் கூடிய சக்தியுடன் மதிமுகவும் சரி, தேமுதிகவும் சரி சுத்தமாக இல்லை என்பதும் புலனாகியுள்ளது. மேலும் திமுகவும் சரியான போட்டியைக் கொடுக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
அதிமுகவைப் பொறுத்தவரை இதை 'அன் அப்போஸ்ட்' வெற்றி என்று கூட கூறலாம்.