கூடங்குளம் விவகாரம்: மத்திய அரசு ஏற்படுத்திய மாயையில் விழுந்த தமிழக அரசு-நெடுமாறன்
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கும் தமிழக அரசின் முடிவு ஏமாற்றத்தை அளிப்பதாக தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறப்பது என்று தமிழக அரசு எடுத்துள்ள முடிவு அனைவருக்கும் ஏமாற்றத்தை அளிக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்டால் தான் மின் பற்றாக்குறை நீங்கும் என்ற மாயத் தோற்றத்தை மத்திய அரசு திட்டமிட்டு ஏற்படுத்தியதன் விளைவு தான் இந்த முடிவாகும்.
உலகெங்கும் பல நாடுகள் அணுமின் நிலையங்களை மூடி வரும் நிலையில் புதிதாக தமிழகத்தில் திறப்பது தொலைநோக்கு பார்வை அற்ற செயலாகும். அணுஉலை மூலம் விபத்து ஏற்பட்டால் தென் தமிழகம் முழுவதும் பாதிப்புக்குள்ளாகும்.
குறிப்பாக மிகப் பெரும் அழிவுக்கு உள்ளாகும் என்ற அச்சத்தின் காரணமாகவே பொது மக்கள் இதற்கு எதிராகப் போராடி வருகின்றனர். மக்களின் அச்சத்தைப் போக்காமல் அணுமின் நிலையத்தைச் செயல்படுத்துவது சரியல்ல.
எனவே, அணுஉலை எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்தவர்களை உடனே அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும். மேலும் கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications