சங்கரன்கோவில்: தேமுதிகவுக்கு 2006 தேர்தலை விட இடைத் தேர்தலில் கூடுதல் ஓட்டு!
சங்கரன்கோவிலுக்கு நடந்த இடைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. 2வது இடம் திமுகவுக்கும், 3வது இடம் மதிமுகவுக்கும் கிடைத்தது. தேமுதிக வேட்பாளர் முத்துக்குமாருக்கு 4வது இடமே கிடைத்தது. அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வியைத் தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட்டைப் பறி கொடுத்தனர்.
ஆனால் தேமுதிகவின் படு தோல்வியிலும் ஒரு வெளிச்சப் புள்ளியைக் காணலாம். அது, இத்தொகுதியில் கடந்த முறை வாங்கியதை விட அதிக அளவிலான வாக்குகளை அக்கட்சி வேட்பாளர் பெற்றிருப்பது.
2011ல் நடந்த பொதுத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது தேமுதிக. இதனால் சங்கரன்கோவில் தொகுதி அக்கட்சிக்குக் கிடைக்கவில்லை. ஆனால் 2006ல் அக்கட்சி முதல் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டபோது தமிழகம் முழுவதும் தனித்து களம் கண்டது.
சங்கரன்கோவிலில் முத்துக்குமார்தான் அப்போதும் போட்டியிட்டார். அத்தேர்தலில் முத்துக்குமாருக்குக் கிடைத்த ஓட்டு 5531 ஆகும். அத்தேர்தலில் தேமுதிகவுக்கு 5வது இடமே கிடைத்தது. முதலிடத்தை அதிமுகவும், 2வது இடத்தை திமுகவும் பெற்றன. 3வது இடம் பகுஜன் சமாஜுக்கும், 4வது இடம் பார்வர்ட் பிளாக்குக்கும் கிடைத்தன.
ஆனால் தற்போது நடந்த இடைத் தேர்தலில் முத்துக்குமார் ரொம்பவே முன்னேறியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் 12,144 ஆகும். அத்தோடு இந்த முறை 4வது இடத்திற்கும் முன்னேறியுள்ளார். இது நிச்சயம் நல்ல விஷயம்தானே...
கடந்த தேர்தலை விட மிக அதிக அளவிலான வாக்குகளை தேமுதிக இங்கு பெற்றிருப்பது நிச்சயம் கவனிப்புக்குரியதாகும்.