பென்னாகரத்தை மனதில் கொண்டால் சங்கரன்கோவில் குறித்து வருந்தத் தேவையில்லை-கருணாநிதி

சங்கரன்கோவில் இடைத் தேர்தல் தோல்வி குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி 1991-ம் ஆண்டு முதல் தொடர்ந்து அ.தி.மு.க. வெற்றி பெற்று வருகின்ற தொகுதி. அந்த தொகுதியை அவர்கள் தக்க வைத்துக்கொள்வார்கள் என்பது எதிர்பார்த்த ஒன்று தான்.
எனினும் தி.மு.க., தன்னுடைய ஜனநாயக கடமையை அங்கே ஆற்றியது. அந்த வகையில் வெற்றி பெற்றவர்களை வாழ்த்துவதுடன், தி.மு.க. வேட்பாளருக்கு அந்த தொகுதியில் வாக்களித்தவர்கள், வாக்களிக்க பாடுபட்ட தோழமைக்கட்சிகளின் தோழர்கள், முன்னணியினர் அனைவருக்கும் தி.மு.க. சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சங்கரன்கோவில் தேர்தலில் சவால் விட்டவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்து விட்டனர் என்று முதல்வர் ஜெயலலிதா பெருந்தன்மையுடன் பேட்டி கொடுத்ததாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது. ஆனால் முதல்வர் ஜெயலலிதாதான் சட்டப்பேரவையில் தே.மு.தி.க. தலைவரைப் பார்த்து, தேர்தல் முடிவு தங்களுக்கு சாதகமாக இருக்குமென்ற ஏதோ ஒரு திடமான நம்பிக்கையோடு சவால் விட்டார்.
அவரது "சவால்'' பொய்க்காதிருக்கத்தான் சங்கரன்கோவில் தொகுதியில் 32 அமைச்சர்கள் முற்றுகையிட்டு தேர்தல் ஆணையத்தின் பூரண ஒத்துழைப்போடு தாங்கள் பணியாற்றினார்கள். அதற்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது.
கடந்த 9 மாதங்களுக்கு முன்பு 2011-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது-இதே சங்கரன்கோவில் தொகுதியில், தி.மு.க. வேட்பாளர் 61,902 வாக்குகள் பெற்றதற்கு மாறாக, இந்த இடைத்தேர்தலில் 26,212 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். அதாவது 35,690 வாக்குகள் தி.மு.க. விற்கு இந்த ஒன்பதே மாதங்களில் என்ன காரணத்தாலோ குறைந்துவிட்டன. அல்லது குறைக்கப்பட்டு விட்டன.
அதே 2011 தேர்தலில், அ.தி.மு.க. 72,297 வாக்குகள் பெற்றதற்கு மாறாக, தற்போது 94,977 வாக்குகள் அதாவது கூடுதலாக 22,680 வாக்குகளை, அமைச்சர்களின் அபரிமிதமான உழைப்பு, முதல்வரின் ஹெலிகாப்டர் விஜயம், ஆளுங்கட்சியின் அடுக்கடுக்கான இலவச சாதனை விநியோகங்கள், காவல் துறையினரின் கண்காணிப்பு, தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமற்ற நடவடிக்கைகள் காரணமாக பெற்றுள்ளது.
இடைத்தேர்தல்களில் பொதுவாக ஆளுங்கட்சி தான் வெற்றி பெற்று வருகிறது என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உண்டு. உதாரணமாக 2006-ம் ஆண்டு முதல் 2011 வரை தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்த போது, நடைபெற்ற மதுரை (மத்திய தொகுதி)யில் 31,085 வாக்குகள் வித்தியாசத்திலும்; மதுரை (மேற்கு); தொகுதியில் 31,115 வாக்குகள் வித்தியாசத்திலும்; திருமங்கலத்தில் 39,266 வாக்குகள் வித்தியாசத்திலும்; கம்பத்தில் 57,373 வாக்குகள் வித்தியாசத்திலும்;
திருவைகுண்டத்தில் 31,359 வாக்குகள் வித்தியாசத்திலும்; தொண்டாமுத்தூரில் 71,487 வாக்குகள் வித்தியாசத்திலும்; பர்கூரில் 59,103 வாக்குகள் வித்தியாசத்திலும்; இளையான்குடியில் 41,456 வாக்குகள் வித்தியாசத்திலும்; திருச்செந்தூரில் 46,861 வாக்குகள் வித்தியாசத்திலும்; வந்தவாசியில் 38,017 வாக்குகள் வித்தியாசத்திலும்; கடைசியாக 27-3-2010 அன்று நடைபெற்ற பென்னாகரத்தில் 36,384 வாக்குகள் வித்தியாசத்திலும் ஆக 11 இடைத் தேர்தல்களிலும் ஆளுங்கட்சியின் கூட்டணி தான் வெற்றிபெற்றது.
கடைசியாக நடைபெற்ற பென்னாகரம் இடைத் தேர்தலில் இன்றைய ஆளுங்கட்சி தனது டெபாசிட் தொகையை பறி கொடுக்கக் கூடிய நிலைக்கு ஆளானதையும் மனதிலே கொண்டால், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நாம் வெற்றி வாய்ப்பினை இழந்ததற்காக வருந்தத் தேவையில்லை என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications