கணவரின் சொத்தில் மனைவிக்கு உரிமை: சட்டமசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: திருமண வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு இணைந்து வாழப்பிடிக்காமல் உள்ள தம்பதிகள் விரைவில் விவாகரத்து பெறும் புதிய சட்ட மசோதா கொண்டு வரப்படுகிறது. இதற்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
திருமண சட்டதிருத்த மசோதா கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த மசோதா பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதை பரீசிலித்த நிலைக்குழு, இந்த மசோதாவில் நான்கு திருத்தங்களை செய்யும்படி பரிந்துரை செய்தது. இதனையடுத்து இந்த மசோதாவை மாற்றியமைக்க வெள்ளிக்கிழமை கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
திருமண சட்ட திருத்த மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள்:
பரஸ்பரம் விவாகரத்து கோரி விண்ணப்பம் செய்யும் தம்பதிகள் குறைந்த பட்சம் ஆறு முதல் 18 மாதங்கள் வரை விவாகரத்து கிடைக்க காத்திருக்க வேண்டும். இனி அவ்வாறு காத்திருக்க தேவையில்லை. புதிய சட்ட திருத்த மசோதாவில் இனி சேர்ந்து வாழவே முடியாத திருமணம் என்ற புதிய விதிமுறை, சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால், பிரிந்தவர்கள் விரைவில் விவாகரத்து பெற்றுவிட முடியும். இனி அவர்கள் ஒன்று சேர வாய்ப்பே இல்லை என்று நீதிமன்றம் தீர்மானிக்கும் பட்சத்தில் உடனடியாக விவாகரத்து வழங்கலாம்.
இதேபோல் சேரவே முடியாது என்ற பிரிவில் கணவன் விவாகரத்து கேட்டால் அதை எதிர்க்க மனைவிக்கு உரிமை உண்டு. ஆனால் இதே காரணத்திற்காக மனைவி விவாகரத்து கேட்டால் அதை எதிர்க்க கணவருக்கு உரிமை இல்லை.
திருமணத்திற்குப் பின்னர் கணவர் வாங்கும் சொத்தில் மனைவிக்கு உரிமை. விவாகரத்து பெற்ற பின்னர் பெற்ற பிள்ளைக்கு உள்ள உரிமையைப் போல தத்து எடுக்கும் பிள்ளைக்கும் உரிமை அளிப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால் விரைவில் இந்த சட்டம் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications