கோவில்பட்டியில் பதட்டம்- மார்க்கிஸ்ட் நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு
கோவில்பட்டி: கோவில்பட்டியில் இன்று அதிகாலை மார்க்சிஸ்ட் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் வசித்து வருபவர் சீனிவாசன். இவர் மார்க்கிஸ்ட் நகர செயலாளராக உள்ளார். இவரது மனைவி குமுதம். இவர்களுக்கு நந்தா, தெரசா ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் திடீரென்று சீனிவாசன் வீட்டின் முன் வெடிகுண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டது. இதனால் சீனிவாசன் குடும்பத்தினர் அலறி அடித்து ஓடி வந்தனர். அப்போது 2 பெட்ரோல் குண்டுகள் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை பார்த்தனர். குண்டு வீசியவர்களை தேடி பார்த்தனர். அதற்குள் அவர்கள் ஓடி விட்டனர். இதை தொடர்ந்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
டிஎஸ்பி சிலம்பரசன், கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகேசன், மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அவர்கள் வீட்டின் முன் சிதறி கிடந்த பெட்ரோல் குண்டுகளின் பாகங்களை எடுத்துச் சென்றனர்.
மார்க்கிஸ்ட் செயலாளர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் கடந்த ஜனவரி மாதம் தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications