எந்த ஒதுக்கீடுமே இல்லை..... உயர்கல்வித் துறையில் தனியாரை ஊக்கப்படுத்துகிறது தமிழக அரசு?
சென்னை: தமிழக நிதிநிலை அறிக்கையில், பல்வேறு துறைகளிலும் புதிய அறிவிப்புகள், அரசின் கொள்கை முடிவுகள் இடம் பெற்றுள்ள நிலையில், பிரச்னைகள் மலிந்துள்ள உயர்கல்வித் துறையில் மட்டும் எந்த ஒரு அறிவிப்பும் கிடையாது. உயர்கல்வித் துறையை தனியார்மயமாக்குவதற்கு ஊக்கப்படுத்தும் நோக்கத்தில்தான் அரசு எந்த அறிவிப்புமே வெளியிடவில்லையோ என்று ஆசியர் சங்கங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன.
இரு பத்திகளில்..
நிதிநிலை அறிக்கையில், 58, 59வது பக்கங்களில், மொத்தமே இரு பத்திகளாக உயர்கல்வித் துறை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், 2011-12ல் 11 புதிய கலை, அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டது குறித்தும், தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் புதிய பொறியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீரங்கத்தில், தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், தேசிய சட்டப் பள்ளி ஆகியவற்றை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் அறிவிப்பு இல்லை.
இது தொடர்பாக பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலர் பிச்சாண்டி கூறியதாவது:
ஒன்று, இரண்டு என விரல் விட்டு எண்ண முடியாத அளவிற்கு, உயர்கல்வித் துறையில் ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன. பல்கலைக் கழக மானியக்குழு, பேராசிரியர்கள் 65 வயது வரை பணியாற்றலாம் என கூறியுள்ளது. இதைப் பற்றி, தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை இதுவரை அறிவிக்கவில்லை. நிதிநிலை அறிக்கை என்றாலே, அறிவிப்புகள் தான் நினைவுக்கு வரும். அதன்படி, புதிய கல்லூரிகள் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்தோம். ஒன்று கூட அறிவிப்பு இல்லை. தனியார்மயத்தை அரசு ஊக்குவிப்பது போல் தெரிகிறது என்றார் அவர்,
துணைவேந்தர் பணியிடங்கள்
அரசு கலை, அறிவியல் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவது, ஐந்து அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்களை, சென்னை அண்ணா பல்கலையுடன் இணைத்ததை அடுத்து, அரசு அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.மேலும், வேலூர் திருவள்ளுவர் பல்கலை, சென்னையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம், விளையாட்டு பல்கலைக் கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை, அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம் (கொடைக்கானல்), கல்வியியல் கல்லூரி பல்கலைக் கழகம் ஆகிய ஏழு பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்பும் விவகாரம் என, எதுவுமே நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. உயர்கல்வித் துறையை மேம்படுத்தும் வகையில், எவ்வித திட்டங்களும் இடம்பெறாதது, கல்லூரி ஆசிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
காலி பணியிடங்கள்
தமிழக அரசின் இந்த மெளனம் குறித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் முன்னாள் செயலர் பழனி கூறியதாவது:
அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மட்டும் 4,000 ஆசிரியர் பணியிடங்கள் காலி. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஏற்கனவே, 1,060 ஆசிரியர்களை நியமனம் செய்யப்போவதாக அறிவித்தனர். ஆனால், எந்த முறையில் நியமனம் இருக்கும் என, இதுவரை அறிவிக்கவில்லை.ஆசிரியர் நியமனம், புதிய கல்லூரிகள் உள்ளிட்ட பல அறிவிப்புகளை எதிர்பார்த்தோம். ஆனால், எதுவுமே இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. அரசின் நடவடிக்கைகள், உயர்கல்வித் துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பது போல் உள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications