புதுவை சட்டசபையில் அமளி: அதிமுக, திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்
புதுச்சேரி: புதுவை சட்டபையில் ஆளுநர் இக்பால் சிங் உறையாற்றியபோது அமளியில் ஈடுபட்ட அதிமுக, திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்ட்டனர்.
புதுச்சேரியில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தர்கண்ட் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடந்ததால் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்குவது குறித்த மத்திய திட்டக்குழு கூட்டம் நடைபெறவில்லை. இதனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் அம்மாநில ஆளுநர் இக்பால்சிங் உரையாற்றினார். இதற்காக அவர் இன்று காலை 9.55 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சட்டசபைக்கு சென்றார். சட்டசபை வளாகத்தில் அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து சபாநாயகர் சபாபதி, சட்டசபை செயலாளர் அன்பழகன் ஆகியோர் ஆளுநரை வரவேற்று சட்டசபையின் மைய மண்டபத்திற்கு அழைத்துதச் சென்றனர். அப்போது சட்டசபை வாசலில் காங்கிரஸ் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் ஆளுநரை நோக்கி வந்து அவரை உள்ளே விடமால் வழிமறித்தனர்.
புதுச்சேரியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 5,000 ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும், தானே புயல் பாதித்த பகுதிகளில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று ம், இந்த அரசின் உரையை வாசிக்கக்கூடாது என்றும் கூறி கோஷமிட்டனர். அவர்கள் அரசுக்கு எதிரான பேனர்களை கையில் வைத்திருந்தனர். இதையடுத்து சட்டசபை காவலர்கள் வந்து ஆளுநரை பத்திரமாக உள்ளே அழைத்துச் சென்றனர்.
இக்பால்சிங் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து உரை நிகழ்த்தினார். அப்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஆண்டின் பட்ஜெட் புத்தகத்தை காட்டி அதில் உள்ள திட்டங்களே இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் இன்னும் என்னென்ன திட்டங்களை ஆளுநர் அறிவிக்கப்போகிறார் என்று கூறி அவர் முன்பு அமர்ந்து கோஷமிட்டனர். உடனே காங்கிரஸ் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்களும் ஆளுநர் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகரின் உத்தரவின்பேரில் சட்டசபை காவலர்கள் அதிமுக, திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை குண்டுகட்டாக வெளியே தூக்கிச் சென்றனர்.
இந்த விவகாரத்தால் சட்டசபையில் சுமார் 18 நிமிடங்கள் அமளி ஏற்பட்டது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் ஆளுநர் தனது உரையை வாசித்தார்.












Click it and Unblock the Notifications