தமிழகம் முழுவதும் 2 நாட்கள் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவுடனும், கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் நல்லாசியுடனும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அதிமுக அரசால், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2012-2013-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் நலன் குறித்த பல்வேறு சிறப்பு அம்சங்களை நாட்டு மக்களுக்கு விளக்கிடும் வகையில், கழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டங்கள்'' 31.3.2012, 1.4.2012 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற உள்ளன.
பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோரின் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கழக சட்டமன்ற உறுப்பினர்கள், தத்தமது சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மாவட்ட கழகச்செயலாளர்களும், மாவட்ட கழக நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்பு பேச்சாளர்கள் மற்றும் கலைக்குழுவினருடன் தொடர்பு கொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
சட்டமன்ற தொகுதி வாரியாக பொதுக்கூட்டங்கள் நடந்து முடிந்தவுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்கள் தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பேரூராட்சி, பகுதி மற்றும் ஊராட்சி, கிளை, வார்டு, வட்டங்கள் உட்பட பட்டிதொட்டியெங்கும் உள்ள மக்களிடம் கழக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் நலன் குறித்த பல்வேறு சிறப்பு அம்சங்களை பொதுக்கூட்டங்கள், தெருமுனை பிரசார கூட்டங்கள், துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகள் வாயிலாக விளக்கிடும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications