முட்டி மோதினால் ஒன்னும் நடக்காது, பொறுமையாத் தான் இருக்கணும்: உதயகுமார்

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராட்டக்குழு தலைவர் உதயகுமார் உள்பட 15 பேர் கடந்த 9 நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று போராட்டக்குழுவுடன் தமிழக அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததையடுத்து உதயகுமார் உள்பட 15 பேர் நேற்று தங்களது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர்.
அதன் பிறகு அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உதயகுமார் பேசியதாவது,
அரசு அதிகாரிகள் அளித்த உறுதிமொழிகளை நம்பி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம். ஆனால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவிக்கும் வரை தொடர் உண்ணாவிரதம் தொடரும். அவர்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு போராட்டத்தை வாபஸ் பெறுவது பற்றி முடிவு செய்யப்படும்.
அணு உலைக்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம் குறித்து கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். இது பொறுமையாக இருக்க வேண்டிய காலகட்டம். முட்டி மோதினால் பலன் கிடைக்காது. அதனால் விட்டுக் கொடுத்து தான் போக வேண்டும். இருப்பினும் நமது உரிமைகளை ஒரு நாளும் விட்டுக்கொடுக்க மாட்டோம். அரசு அதன் வேலையைச் செய்யட்டும். நாம் நமது வேலையைச் செய்வோம். சிறையில் உள்ளவர்கள் விடுதலையாகும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்லமாட்டார்கள்; குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மாட்டார்கள்; கடைகள் திறக்கப்படாது. நம் உணர்வுகளை அரசு மதிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications