கடலூரில் திடீர் மழை சாறல்: வெயிலில் வாடிய மக்கள் மகிழ்ச்சி
கடலூர்: வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதியில் இன்று காலையில் திடீரென மழை சாறல் ஏற்பட்டது. இதனால் வெயில் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடலூர், புதுச்சேரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மதிய நேரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கடலூரில் உள்ள மஞ்சக்குப்பம், செம்மண்டலம், திருப்பாபுலியூர், நெல்லிக்குப்பம் ஆகிய பகுதிகளில் லேசாக சாறல் மழை பெய்தது. அதன்பிறகு குளிர்ந்த காற்று வீசியது.
அதேபோல புதுச்சேரியில் இன்று அதிகாலையில் லேசான மழை பெய்தது. இதனால் வெயிலின் வெப்பம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசியது. மேலும் வானம் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியதால், கடலூர் மற்றும் புதுச்சேரி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications