ராணுவ வாகன கொள்முதல் வழக்கு: சிபிஐ வழக்கு-தொழிலதிபர் ரவிரிஷிக்கு சம்மன்
டெல்லி: ராணுவ வாகனங்கள் கொள்முதல் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிரிஷியை விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
ரவிரிஷிக்கு என்ன தொடர்பு?
இந்திய ராணுவத்துக்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய லாரிகளை செக் நாட்டின் டட்ரா நிறுவனம் தயாரிக்கிறது. இவற்றை அரசு நிறுவனமான பிஇஎம்எல். மூலமாக ராணுவம் வாங்குகிறது.
டட்ரா நிறுவனத்தின் தரம்குறைந்த லாரிகளை கூடுதல் விலை கொடுத்து வாங்குவதற்காக ரூ14 கோடி லஞ்சம் தருவதாக முன்னாள் துணை தளபதி திஜேந்தர்சிங் பேரம் பேசினார் என்று ராணுவ தளபதி வி.கே.சிங்.புகார் கூறியிருந்தார். இந்த டட்ரா நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வைத்திருக்கிறது வெக்ட்ரா குழுமம். இக்குழுமத்தின் தலைவர்தான் ரவிரிஷி.
டெல்லியில் நடைபெறும் பாதுகாப்பு துறை தொடர்பான கண்காட்சிக்காக ரவிரிஷி வந்துள்ளார். தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் டட்ரா வாகனங்களை கொள்முதல் செய்தது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்குமாறு அவருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
பிஇஎம்.எல் விளக்கம்
இதனிடையே டட்ரா நிறுவனத்தின் லாரிகள் தரம் குறைந்தவை அல்ல என்று அரசு நிறுவனமான பிஇஎம்எல்-ன் தலைவர் வி.ஆர்.எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
டட்ரா நிறுவன லாரிகள் உயர் தொழில்நுட்பம் கொண்டவை என்றும் அவை தரம் குறைந்தவை என்று ராணுவ தளபதி வி.கே.சிங் கூறியிருப்பது சரியல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடியவை என்பதால் டட்ரா லாரிகளின் விலையும் அதிகமாகத்தான் இருக்கும் என்றும் நடராஜன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications