ஜார்க்கண்ட், உத்தர்காண்ட்டில் ராஜ்யசபா தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை நிறுத்தம்- தேர்தல் ஆணையம்
டெல்லி: ஜார்க்கண்ட் மற்றும் உத்தர்காண்ட் மாநிலங்களில் இன்று நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஜார்க்கண்ட்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 2 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இத்தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்களைவிட தொழிலதிபர்களான அனுஸ்மன் மிஸ்ரா, ஆர்.கே. அகர்வால் மற்றும் பவன்குமார் தூத் ஆகியோரும் போட்டியிட்டனர்.
பாரதிய ஜனதா கட்சியின் 18 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் எம்.பியாகிவிடலாம் என்று அனுஸ்மன் மிஸ்ரா கனவு கண்டார். ஆனால் பாரதிய ஜனதா கட்சிக்குள் அனுஸ்மன் மிஸ்ராவை ஆதரிக்க கடும் எதிர்ப்பு உருவானது. வேறுவழியில்லாம அனுஸ்மன் மிஸ்ரா போட்டியிலிருந்து விலகினார். பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரையும் ஆதரிக்கமாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தொழிலதிபர்கள் களம் இறங்கியுள்ளதால் ஜார்க்கண்ட்டில் எம்.எல்.ஏக்களை விலைபேசும் குதிரை பேரம் நடக்க வாய்ப்பிருப்பதாக ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா தலைவர் பாபுலால் மராண்டி, தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.
மேலும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளரை எம்.எல்.ஏக்கள் ஆதரிப்பர் என்று பாஜக மேலிடம் அறிவித்திருந்தது.
இதனிடையே தொழிலதிபரான அகர்வாலின் சகோதரரின் வாகனத்தில் இருந்து கணக்கில்வராத ரூ2.25 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இது எம்.எல்.ஏக்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது என்பது தேர்தல் ஆணையத்தின் சந்தேகம். மாநிலங்களவை வேட்பாளரான அகர்வாலின் உறவினர் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலங்களவைத் தேர்தலில் இன்று பதிவான வாக்கு எண்ணிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவ்விவகாரம் மாநிலங்களவையில் எதிரொலித்தது. ஜார்க்கண்ட் மாநில பேரவையிலும் எழுப்பப்பட்டது.
உத்தர்காண்ட் மாநிலத்திலும் மாநிலங்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியையும் தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications