ஏழைகளுக்கு கொடுத்த நிலத்தைப் பறித்து ரெட்டி சகோதரர்களுக்கு கொடுத்த ஒய்.எஸ்.ஆர்.
பெங்களூர்: மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஜனார்த்தன மற்றும் கருணாகர ரெட்டி சகோதரர்களுக்கு 14,180.96 ஏக்கர் அரசு நிலத்தை குறைந்த விலையில் கொடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி சுரங்க தொழில் அதிபர்களான ஜனார்த்தன மற்றும் கருணாகர ரெட்டி சகோதரர்கள் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஜம்மலமதுகு கிராமத்தில் வியாபார விஷயத்திற்காக விமான நிலையம் அமைக்க 3,115.64 ஏக்கர் அரசு நிலத்தை ஏக்கர் ரூ.25,000க்கு கொடுத்துள்ளார். இந்த நில விற்பனை கடந்த 2008ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்துள்ளது. இந்த தகவல் மத்திய தலைமை தணிக்கை அதிகாரி (சிஏஜி) சட்டசபையில் சமர்பித்த அறிக்கையின் மூலம் வெளியே வந்துள்ளது.
முன்னதாக கடந்த 2007ம் ஆண்டு ஜூன் மாதம் ரெட்டி சகோதரர்களின் பிராமிணி ஸ்டீல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 10,760.66 ஏக்கர் அரசு நிலதைத் ஏக்கர் ரூ.18,000க்கு அவர் கொடுத்துள்ளார்.
வியாபார விஷயத்திற்காக தனியார் நிர்வாகம் விமானம் நிலையம் அமைக்க இந்திய அரசு கொள்கை அனுமதிக்காது என்று சிஏஜி அறிக்கை தெரிவி்ததுள்ளது. ரெட்டி சகோதரர்கள் விமான நிலையம் அமைக்க கொடுக்கப்பட்ட நிலம் முன்னதாக பழங்குடியின விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அவர்களிடம் இருந்த நிலத்தை வாங்கித் தான் ரெட்டி சகோதரர்களுக்கு ராஜசேகர ரெட்டி கொடுத்துள்ளார்.
இது தவிர அனந்தபூர் மாவட்டத்தில் ஒபுலபுரம் கிராமத்தில் சுரங்க நிறுவனம் அமைப்பதற்காக ரெட்டி சகோதரர்களுக்கு ஒய்.எஸ்.ஆர். அரசு 304.66 ஏக்கர் நிலத்தை கொடுத்துள்ளது. ஏழை மக்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த நிலத்தை ஒபுலபுரம் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளனர்.
ஆக மொத்தம் ஒய்.எஸ்.ஆர். அரசு ரெட்டி சகோதரர்களுக்கு 14,180.96 ஏக்கர் நிலத்தை குறைந்த விலையில் கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications