கூடங்குளம் அணு உலை பற்றி ரஷ்ய அதிபருடன் மன்மோகன் பேச்சுவார்த்தை

இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியில் தான் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. அணு உலையை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் அணு மின் நிலையப் பணிகள் கடந்த 6 மாதமாக நடக்கவில்லை. இந்நிலையில் கடந்த 19ம் தேதி தமிழக அரசின் உத்தரவின்பேரில் அணு மின் நிலையம் திறக்கப்பட்டு ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். இதையடுத்து அங்கு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
இன்னும் 2 மாதத்தில் கூடங்குளம் அணு மின் நிலையம் மூலம் மின்சாரம் கிடைக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதற்கிடையே பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் டெல்லி வந்துள்ளார். மாநாட்டிற்கு பிறகு அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகள் பற்றி விவாதித்தனர்.
அண்மையில் உச்ச நீதிமன்றத்தால் 2ஜி உரிமம் ரத்து செய்யப்பட்ட நிறுவனங்களில் ரஷ்ய நிறுவனமான சிஸ்டமாவும் ஒன்று. அதில் ரஷ்ய அரசுக்கு 17.14 சதவீத பங்குகள் உள்ளன. ஆகையால் இந்த விவகாரம் குறித்தும் பேசிய மெத்வதேவ் சிஸ்டமா நிறுவன முதலீடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். பிரதமரும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் பற்றி இந்திய சட்டப்படி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications