பெரியபாளையத்தில் உடலை பிளேடால் கிழித்து பி.இ. மாணவர் தூக்கு போட்டு தற்கொலை
பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. 3ம் ஆண்டு படித்து வந்த மாணவர் தனது உடலை பிளேடால் கிழித்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரியபாளையம் அருகே உள்ள பணப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் திருவாரூர் மாவட்டம் விஜயபுரம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் பி.இ. 3ம் ஆண்டு படித்து வந்தார். அவர், சக மாணவர்கள் 3 பேருடன் சேர்ந்து பெரிய பாளையம் வ.உ.சி.நகரில் குமார் என்பவரின் வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார்.
நேற்று அவருடன் தங்கியிருந்த மாணவர்களில் 2 பேர் பரீட்சை எழுத சென்னைக்கும், இன்னொருவர் கல்லூரிக்கும் சென்றுவிட்டனர். வெங்கடேஷ் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்தார். கல்லாரிக்கு சென்ற மாணவர் மாலையில் வந்தபோது வீடு உட்புறமாக பூட்டியிருந்தது. வெங்கடேஷ் தூங்குகிறார் என்று நினைத்து அவர் வெளியே சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோதும் கதவு திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேமடைந்த அவர் வீட்டு உரிமையாளர் குமாரிடம் இது குறித்து தெரிவித்தார். குமார் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்தவுடன் போலீசார் அங்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அப்போது வெங்கடேஷ் ஜன்னல் கம்பியில் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்தார். அவரது உடல் முழுவதும் பிளேடால் கிழித்த காயங்கள் இருந்தன.
தற்கொலை குறித்து வெங்கடேஷுடன் தங்கியிருந்த மாணவர்களிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் வெங்கடேஷ் சரியாக படிக்காமல் 20 பேப்பர் அரியர்ஸ் வைத்திருந்ததும், பெற்றோர் அனுப்பிய பணத்தை எல்லாம் செலவழித்துவிட்டு கல்லூரி கட்டணம் செலுத்தாமல் இருந்ததும் தெரிய வந்தது. கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டிய நெருக்கடியால் அவர் மனஉளைச்சலில் இருந்ததாக சகமணவர்கள் தெரிவித்தனர்.
இந்த கராணத்தால் அவர் தனது உடலை பிளேடால் கிழித்து தூக்குபோட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. வெங்கடேஷ் தற்கொலை செய்து கொண்டது பற்றி அறிந்த பிற மாணவர்கள் இன்று காலை கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications