மதுரை அருகே சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே சிலிண்டர் வெடித்து ஒருவர் பரிதாபமாக பலியானார்.
மதுரை கள்ளிக்குடி அருகே உள்ளது மருதங்குடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (45). இவரது மைத்துனர் இளங்கோவன்(48) இவர்கள் இருவரும் வீட்டின் அருகே டீ கடை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ராஜா தோட்டத்திற்கு சென்றதால், டீ கடையை இளங்கோவன் கவனித்து வந்தார். அப்போது திடீரென கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க இளங்கோவன் மற்றும் அவரது மகன் அன்பழகன் முயற்சி செய்தனர்.
அப்போது கடையில் இருந்த சிலிண்டர் எதிர்பாராத விதமாக திடீரென வெடித்துச் சிதறியது. இந்த விபத்தி்ல் இளங்கோவன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவரது மகன் அன்பழகன் பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.