கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக பிரமுகரை கட்சியை விட்டு தூக்கிய ஜெ.!
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் குடவாசல் ராஜேந்திரன், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தராஜ் ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
இதுபோல் குடவாசல் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அரசன் கோவன், குடவாசல் சண்முகம் என்கிற தென்கோவன், மன்னார்குடி ஒன்றியம் பைங்காநாடு கிளைக் கழக அதிமுக செயலாளர் மகேந்திரன், மன்னார்குடி நகர மன்ற முன்னாள் உறுப்பினர் அறிவழகன், மன்னார்குடி அன்புராஜ் ஆகியோரும் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கழக உடன் பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களில் குடவாசல் ராஜேந்திரன் திருவாரூரில் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது போட்டியிட்ட திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டவர் ஆவார். கருணாநிதியை எதிர்த்து வெல்ல முடியாது என்றபோதிலும், கடுமையாக பிரசாரம் செய்து அனைவரையும் கவர்ந்தவர் ராஜேந்திரன்.
மேலும் குடவாசல் அரசன்கோவன் மற்றும் தென்கோவன் ஆகியோர் ராஜேந்திரனின் மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியை விட்டு நீக்கும் அளவுக்கு இந்த மூவரும் செய்த குற்றம் என்னவோ.. தெரியவில்லை...!