ராமஜெயத்தை கொன்ற கூலிப்படையினர் யார்?.. சிக்கிய குரல்களை வைத்து வேட்டை!

ராமஜெயத்தின் படுகொலை திருச்சியை மட்டுமல்லாமல் தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் சமீப காலத்தில் நடந்த 2வது மிகப் பெரிய கொலைச் சம்பவம் இது. சில மாதங்களுக்கு முன்புதான் திண்டுக்கலில் தலித் தலைவர் பசுபதி பாண்டியன் கொடூரமாக வெட்டிச் சாய்க்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் ராமஜெயத்தின் கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூலிப்படையை ஏவி இந்தக் கொலையை நடத்தியுள்ளது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்தக் கூலிப்படையினர் சென்னைப் பதிவெண்ணைக் கொண்ட டெம்போ டிராவலரைப் பயன்படுத்தி அதில் வைத்துத்தான் ராமஜெயத்தைக் கடத்தியுள்ளனர்.
ஒரே வெட்டில் உயிர் போயிருக்கலாம்
தினசரி காலையில் தனது உறவினர்கள், நண்பர்களோடு உழவர் சந்தை பகுதியில் வாக்கிங் செல்வது ராமஜெயத்தின் வழக்கமாகும். நேற்று துரதிர்ஷ்டவசமாக அவர் மட்டும் தனியாக வாக்கிங் போயுள்ளார். இதை நோட்டம் பார்த்துத்தான் அவரை டிராவலர் வேன் மூலம் தூக்கியுள்ளனர்.
வேனுக்குள்ளேயே வைத்து அவரைக் கை, கால்களைக் கட்டிப் போட்டு கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. தலையில் பலத்த அரிவாள் வெட்டு காணப்படுகிறது. ஒரே வெட்டில் அவர் உயிர் போயிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதுகுறித்து பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் உறுதி செய்ய முடியும்.
கொலை செய்த பின்னர் உடலை திருவளர்ச்சோலைப் பகுதியில், அடர்ந்த புதர்கள் உள்ள இடத்தில் போட்டு விட்டுப் போய் விட்டனர். டிராவலர் வேன் அந்தப் பகுதியில் இருந்ததை அப்பகுதியில் சிலர் பார்த்துள்ளனர். ராமஜெயம் கொலையான செய்தி பரவியதைத் தொடர்ந்து இந்த டிராவலர் விவகாரத்தை அவர்கள் போலீஸாருக்குத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீஸார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தியதில் சமயபுரம் அருகே இந்த டிராவலரைப் போலீஸார் பிடித்துள்ளனர். அந்த வேன் யாருடையது, திருடப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சிக்கிய குரல்கள்
இதற்கிடையே போலீஸார் கைவசம் முக்கியத் துப்பு ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, ராமஜெயத்தைக் கொல்வதற்கு முன்பு அவரது மனைவி லதா, அவரது கல்லூரி ஊழியரான கோபாலகிருஷ்ணன், உறவினர் அனுராதா ஆகியோரிடம் பேசியுள்ளனர். ராமஜெயத்தின் செல்போன் மூலமாகவே அவர்கள் பேசியுள்ளனர்.
இந்தக் குரல்களை அடையாளம் காண தற்போது போலீஸார் முயன்று வருகின்றனர். ராமஜெயத்தின் குடும்பத்தினர், உறவினர்களிடம் இந்தக் குரல்களைப் போட்டுக் காட்டி அடையாளம் கண்டுபிடிக்க தற்போது போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
மேலும், கொலை நடந்த சமயத்தில், கொலையாளிகள் வேறு யாருடனாவது செல்போனில் பேசினரா என்பது குறித்து அறிய சம்பந்தப்பட்ட பகுதி செல்போன் டவர் மூலம் முயற்சி நடந்து வருகிறது.
5 தனிப்படை - சீக்கிரம் சிக்குவர்
ராமஜெயம் கொலை வழக்கை போலீஸார் படு துரிதமாக விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலையாளிகளை சிந்தாமல், சிதறாமல் கொத்தோடு அள்ளும் வகையில் 5 தனிப்படைகளைப் போலீஸார் அமைத்து தீவிரமாக விசாரணைகளையும், தேடுதல்களையும் முடுக்கி விட்டுள்ளனர்.
விசாரணை குறித்து இப்போது கூற முடியாது. விரைவில் குற்றவாளிகள் சிக்குவார்கள் என்று மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications