ராமஜெயத்தை கழுத்தை நெரித்துக் கொன்றனரா?

கல்லணை அருகே திருவளர்ச்சோலை என்ற இடத்தில் புதர் மண்டிய பகுதியிலிருந்து நேற்று காலை ராமஜெயத்தின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர்தான் உடலைக் கண்டுபிடித்தனர்.
பி்ன்னர் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் ராமஜெயம் கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சுத் திணறி மரணமடைந்ததாக தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் தலையின் வலது மேல்புறம் ரத்தக் காயம் இருப்பதையும் டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது எப்படி ஏற்பட்டது என்பது குறித்துத் தெரியவில்லை. தலையில் அடித்ததால் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அல்லது இரும்புக் கம்பி ஏதாவது ஒன்றில் தலை மோதியதால் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
வேன் ஒன்றில்தான் ராமஜெயத்தை கடத்தியுள்ளனர். அப்போது வேனுக்குள் கொலை செய்ய நடந்த முயற்சியின்போது தலையில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
முன்னதாக ராமஜெயத்தின் தலையில் அரிவாள் வெட்டுக் காயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன என்பது நினைவிருக்கலாம். ஆனால் பிரேதப் பரிசோதனையில், கழுத்து நெரிக்கப்பட்டு மரணம் சம்பவித்ததாக தெரிய வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications