கேரளாவில் ரூ.250 கோடி நிதி நிறுவன மோசடி: தமிழக அரசியல் பிரமுகர் கைது!
சென்னை: கேரளாவில் ரூ.250 கோடி மோசடி செய்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரும், அரசியல் பிரமுகருமான நாராயணன் நரசிம்மலு என்பவரை கேரளா போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் நாராயணன் நரசிம்மலு(38). பிரபல தொழிலதிபர் மற்றும் அரசியல் கட்சி ஒன்றின் பிரமுகராக உள்ளார். அவர் மீது கேரளாவில் பல இடங்களில் நிதி நிறுவனங்கள் நடத்தி சுமார் 10,000 பேரிடம் ரூ.250 கோடி பணம் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு விசாரணைக்காக கொச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சதானந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னைக்கு வந்த தனிப்படை போலீசார் நரசிம்மலுவை கைது செய்து கேரளாவிற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர் தற்போது கேரளாவில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக நரசிம்மலுவின் கூட்டாளிகளான கமலக்கண்ணன், பூபதி மனோகரன், கிருபாகரன் ஆகிய 3 பேரையும் ஏற்கனவே போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக மேலும் 3 பேரை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications