இருளர் பெண்களை போலீஸார் பலாத்காரம் செய்யவில்லை: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: இருளர் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அறிகுறி இல்லை என்றும், லாக்கப் மரணத்தில் காவலர்கள் மீது குற்றம் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

லாக்கப் மரணங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் இரா.அண்ணாதுரை, காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.விஜயதரணி ஆகியோர் தெரிவித்த கருத்துகளுக்கு முதல்வர் ஜெயலலிதா அளித்த பதில்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் இரா.அண்ணாதுரை 28-ந் தேதி இந்த மாமன்றத்திலே உரையாற்றும்போது, கடந்த 9 மாத கால ஆட்சியில் 11 லாக்கப் மரணங்கள் நடைபெற்றிருக்கின்றன என்று கூறியிருந்தார்.

அ.தி.மு.க. 2011-ம் ஆண்டு மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றபிறகு, காவல் பாதுகாப்பில் ஏற்பட்ட மரண நிகழ்வுகள், அவர் குறிப்பிட்டதுபோல் 11 அல்ல என்பதையும், 4 மரண நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன என்ற சரியான தகவலை பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்த 4 மரண நிகழ்வுகளுக்கும் காவல் துறையினர் காரணமா என்பது குறித்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 176-ன்கீழ், சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்ற நடுவர்களால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், ஒரு விசாரணையில் காவல்துறை மீது எந்தவித குற்றமும் இல்லை என குற்றவியல் நீதிமன்ற நடுவர் அறிக்கை அளித்துள்ளார். எஞ்சிய 3 அறிக்கைகள் இன்னமும் பெறப்படவில்லை. விசாரணை அடிப்படையில், காவலர்கள் மீது குற்றம் இருப்பின், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை நியாயமாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்பதால்தான், இந்தக் குற்றச்சாட்டுகளை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு எங்கள் அரசு உட்படுத்தியிருக்கிறது.

மேலும், அண்ணாதுரை உரையாற்றும்போது, விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் மலைஜாதி பெண்கள் மீது நடைபெற்றதாக சொல்லப்படும் பாலியல் பலாத்காரம் பற்றியும் குறிப்பிட்டு, காவலர்களுடைய அத்துமீறிய செயலைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இருளர் பெண்கள் விவகாரம்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட சில திருட்டு வழக்குகள் தொடர்பாக, திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் 22.11.2011 அன்று இரவு டி.மண்டபம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும் போது அந்த கிராமத்தைச் சேர்ந்த 4 இருளர் பெண்களை காவல் துறையினர் பாலியல் பலாத்காரம் செய்ததாக, 4 நாட்களுக்குப் பிறகு காவல் துறையில் ஒரு புகார் பெறப்பட்டது.

இந்தப் புகார் பதிவு செய்யப்பட்டு, திருக்கோவிலூர் நீதித்துறை நடுவர் விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்தப் பெண்கள் 29.11.2011 அன்று குற்றவியல் நீதிபதியால் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பரிசோதனை செய்த மருத்துவர், பாலியல் பலாத்காரம் செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று அறிக்கை அளித்துள்ளார்.

குற்றவியல் நீதிபதியின் விசாரணை இன்னமும் முடிவடையவில்லை. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ளது. உயர்நீதிமன்றம் தேவை என்று கருதினால், இந்த வழக்கை குற்றப்புலனாய்வுத் துறைக்கு (சிபிசிஐடி) மாற்றம் செய்வதாக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை 2.4.2012 அன்று ஒத்திவைத்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில், இருளர் இனத்தைச் சேர்ந்த சில பெண்களை காவல் துறையினர் இரவு நேரத்தில் வாகனத்தில் வைத்திருந்ததாக தெரிய வந்ததால், சம்பந்தப்பட்ட ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் மற்றும் இரண்டு காவலர்கள் என ஐந்து பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் 4 பெண்களுக்கும் தலா ரூ.5 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+